Wednesday, January 30, 2013

விவசாயிகளைப் பாதுகாப்போம்


விவசாயிகளைப் பாதுகாப்போம்

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்; அதனால்
உழந்தும் உழவே தலை.
என்பார் திருவள்ளுவர். இந்த உலகம் உயிர்ப்புடன் வாழ வேண்டுமானால், அனைவருக்கும் உணவளிக்கும் உழவுத் தொழில் பொலிவுடன் விளங்கியாக வேண்டும். விவசாயமே உலகின் ஆதித் தொழில். உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையாத தேசங்களில் அரசியல் நிலையற்ற தன்மை நிலவுவதைக் காண்கிறோம். எனவே விவசாயம் நாட்டின் ஆணிவேர் ஆகிறது. விவசாயம் சார்ந்ததாக இருந்ததால் தான், ‘’கிராமங்களே நாட்டின் முதுகெலும்பு’’ என்று மகாத்மா காந்தி கூறினார். ஆனால், நமது நாட்டின் விவசாயம் தற்போது என்ன நிலையில் இருக்கிறது?
மகாராஷ்டிரா மாநிலத்தில் விதர்ப்பா பகுதியில் மட்டுமே வங்கியில் வாங்கிய விவசாயக் கடனைக் கட்ட முடியாததால் பலநூறு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் விவசாயிகள் தற்கொலையில் முதலிடம் வகிக்கிறது. இத்தனைக்கும் இந்த விவசாயிகள் விளைவித்த பருத்திக்கு சந்தையில் கிராக்கி. எங்கோ தவறு நடப்பதை இந்த விவசாயிகளின் தற்கொலைகள் காட்டுகின்றன.
பல்லாயிரம் கோடி ஊழல் புரிந்த அரசியல்வாதிகள் புன்னகையுடன் பத்திரிகைகளில் ‘போஸ்’ தருகிறார்கள். அடுத்தவர் பணத்தை மோசடி செய்து வயிறு வளர்க்கும் நிதி மோசடி நிறுவனங்களின் அதிபர்கள் புன்னகையுடன் காவலர்கள் சூழ உலா வருகிறார்கள். லஞ்சம் வாங்கியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர் கூட வழக்குரைஞர் வைத்து வாதாடுகிறார்- தான் தவறிழைக்கவில்லை என. ஆனால், சில லட்சம் அல்லது சில ஆயிரம் கடன் வாங்கிவிட்டு, அதைத் திருப்பித் தர முடியாத அவமானத்தால் தற்கொலை செய்துகொள்ளும் பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் இதே காலகட்டத்தில் நமது நாட்டில் தான் இருக்கிறார்கள். எங்கோ ஒரு சிக்கல் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
அந்தச் சிக்கல் என்ன? விவசாயிகளை வாழ்வின் இறுதிக்குத் தள்ளும் காரணிகள் எவை? என்பதை ஆராய்கிறது, ஈரோடு சு.சண்முகவேல் எழுதியுள்ள விவசாயிகளைப் பாதுகாப்போம் என்ற இந்தப் புத்தகம்.
மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் போன்ற தன்மானத்துடன் வாழப் பழகிவிட்ட, சொந்தக் காலில் நின்று பழகிப்போன உழவர்கள், தாங்கள் இத்தனை காலம் நம்பிவந்த விவசாயம் தங்களைக் கைவிட்டு விடுவதைத் தாள முடியாமல் தான் இறுதி முடிவு எடுக்கிறார்கள். அவர்களை மீள முடியாத விஷச் சூழலில் தள்ளிவிடுகிறது வட்டியும், கடனும்.

விவசாயம் விவசாயிகளை ஏமாற்றிவிட்டது என்பது தான் முக்கியமான சிக்கல். இதற்கு விவசாயத்தை திட்டமிட்ட முறையில் அணுகாத விவசாயிகளும் ஒரு காரணம். விவசாயிகளை இந்த விஷச் சூழலில் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கும் அரசும் ஒரு காரணம். மொத்தத்தில் இப்போதுள்ள விவசாய முறையே விவசாயிகளின் வீழ்ச்சிக்கு காரணமாக இருப்பதைக் காண்கிறோம். இந்த நிலையில் இருந்து விவசாயிகளைப் பாதுகாப்பது எப்படி?
விவசாயிகளைப் பாதுகாப்பது ஏன் முக்கியமாகிறது? ஏனெனில், நாட்டின் பொருளாதாரத்தில் சரிபாதிக்கு மேல் பங்களிப்பது விவசாயம் தான். நாட்டு மக்களுக்கு பசியாற உணவளிப்பது விவசாயம் தான். நாட்டு மக்கள் தொகை 130 கோடியாகிவிட்ட சூழலில், இன்றும் 60 சதவீதம் பேருக்கு வேலை அளிப்பது விவசாயமே. நாட்டின் ஊரக, கிராமப் புறங்களை இன்றும் வாழச் செய்வது விவசாயமே. விவசாயம் குலையுமானால், நாட்டின் சட்டம் ஒழுங்கும் சீர்குலையும். பஞ்சம் தாண்டவமாடும். தேசிய ஒருமைப்பாடும் கானல்நீராகும். இவை வெறும் கற்பனை மிரட்டல்கள் அல்ல. ஆப்பிரிக்காவில் விவசாயம் நொடிந்ததால் தத்தளிக்கும் தேசங்கள் பல. ஒருகாலத்தில் பொன்னுலகாக வர்ணிக்கப்பட்ட சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியும் கூட விவசாயிகளின் வீழ்ச்சியால் தான் ஏற்பட்டது. தொழில்மயமாதலுக்கு விவசாயத்தை ஒப்புக் கொடுத்த ரஷ்ய சர்வாதிகாரிகளின் கொடுங்கோன்மையால், 1990களில் ரஷ்யாவில் கடும் உணவுப்பஞ்சமும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவும் நேரிட்டன. இவை சமீபகால சரித்திரங்கள்.
தெய்வப்புலவர் திருவள்ளுவர் தெரியாமல் அந்தக் குறளை (104-1) சொல்லி விடவில்லை. அதனால் தான் விவசாயத்தைக் காத்தாக வேண்டியுள்ளது. அதற்கு, விவசாயத்தை குலத்தொழிலாகக் கொண்ட விவசாயிகளைக் காத்தாக வேண்டும். அதற்கு விவசாயம் தற்போது சந்திக்கும் சிரமங்களைக் கண்டறிந்தாக வேண்டும். ”நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்பதும் திருவள்ளுவர் கூறிய இலக்கணம் அல்லவா?
அந்த அடிப்படையில் தான் இந்த நூலை எழுதி இருக்கிறார் சு.சண்முகவேல். அடிப்படையில் அவர் ஒரு விவசாயி. தற்போது ஈரோட்டில் பதிப்புத் துறையில் பணிபுரிந்தாலும், அவரது மனம் ஒட்டன்சத்திரம் – கன்னிவாடி அருகில் உள்ள தனது குக்கிராமத்தில் இருக்கும் விவசாய நிலம் மீதே செல்கிறது. வானம் பார்த்து செய்யும் சாகுபடி, விளைச்சல் தந்தாலும் வீட்டு அலமாரியை நிறைப்பதில்லை என்ற உண்மையை சிறுவயது முதலே அவர் கண்டு வந்திருக்கிறார். அவர் தொழில் மாறியதற்கும் காரணம் இதுதான். எனினும், தனது குலத் தொழிலின் மீட்சிக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற தாகமே இந்த நூலை எழுதுமாறு அவரைத் தூண்டி இருக்கிறது.
விவசாயத்தின் அடிப்படை இயற்கை. வான்மழை பொய்த்தால் விவசாயம் தாங்காது. அப்படியே தாக்குப் பிடித்தாலும், இறுதியில் கிடைக்கும் விளைபொருளுக்கு கட்டுபடியான விலை கிடைக்காவிட்டால் என்ன பயன்? ”காடு விளைஞ்சென்ன மச்சான், நமக்கு கையும் காலும் தானே மிச்சம்?” என்ற பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் திரைப்பாடல் இன்றும் பொருத்தமாக இருப்பது நிதர்சனம் அல்லவா? ஆக, விவசாயம் காப்பாற்றப்பட வேண்டுமானால், அதன் களச் சிக்கல்கள் தவிர, வர்த்தக சிக்கல்களையும் சரிப்படுத்தியாக வேண்டும். சில உதாரணங்களைப் பார்க்கலாம்.
அண்மையில் ஈரோட்டில் கூடிய மஞ்சள் விவசாயிகள் தாங்கள் விளைவித்த மஞ்சளுக்கு குவின்டாலுக்கு ரூ. 9,000 வழங்க வேண்டும் என்று விலை அறிவித்தனர். ஒரு குவின்டால் (100 கிலோ) மஞ்சள் உற்பத்தி செய்ய செலவினமே விவசாயிக்கு ரூ. 6,000க்கு மேல் ஆகிறது. ஆனால், சந்தையிலும் அரசு சார்ந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும் அதற்கு கிடைக்கும் விலை ரூ. 3,000 முதல் ரூ. 5,000 வரை மட்டுமே. அதே சமயம், மஞ்சள் தூள் விலை கிலோ ரூ. 200 ஆக இருக்கிறது! எனவே தான், தாங்கள் விளைவித்த பொருளுக்கு தாங்களே விலை நிர்ணயம் செய்வோம் என்று களம் இறங்கி இருக்கிறார்கள் விவசாயிகள். இந்தப் போராட்டம் இன்னமும் வெற்றியை முழுமையாக எட்டவில்லை.
ஆந்திரப் பிரதேசத்தில் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கட்டுபடியான விலை கிடைக்காததால் பாலை சாலையில் கொட்டினர் என்பது மற்றொரு செய்தி. கிணத்துக்கடவு தக்காளி மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சியால் (கிலோ ரூ. 2க்கு கூடப் போகாத நிலைமை!) கொந்தளித்த விவசாயிகள் தாங்கள் கொண்டுவந்த தக்காளிகளை திரும்பக் கொண்டுசெல்ல மனமின்றி (அதற்கும் செலவாகுமே!) சாலையோரம் கொட்டிச் சென்றனர் என்பது மற்றொரு செய்தி.
விவசாயிகள் ஒரு பொருளை உற்பத்தி செய்ய 24 மணி நேரமும் பாடுபடுகின்றனர். அதற்குத் தேவையான இடுபொருள்களான விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகளின் விலை அதிகரித்திருக்கிறது. விவசாயக் கூலியாட்கள் கிடைப்பது குதிரைக்கொம்பாக மாறி இருக்கிறது. இயற்கை வஞ்சித்தால் தண்ணீர்ப் பற்றாக்குறை வேறு பாதிக்கிறது. நதிநீர்ப் பிரச்னைகளும் விவசாயிகளுக்குத் தான் சம்மட்டி அடி கொடுக்கின்றன. இத்தனைக்கும் பிறகு விளைபொருளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை என்றால், ஒரு விவசாயி எதற்காகப் பாடுபட வேண்டும்? அரசும் விவசாயிகளைக் கைதூக்கிவிடத் தயாரில்லாதபோது, அவர்கள் விவசாயத்தைக் கடாசிவிட்டு வேறு தொழிலுக்கு மாறுவது நியாயம் தானே?
சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், நம்மால், விளைபொருள்களைப் பாதுகாக்கும் சேமிப்பு, பதனக் கிடங்குகளை மாவட்டத்துக்கு ஒன்று என்ற அளவிலும்கூட அமைக்க முடியவில்லை. அரசு அளிக்கும் குறைந்தபட்ச ஆதார விலைகளும் கூட எல்லா விளைபொருளுக்கும் கிடைப்பதில்லை. கஷ்டப்பட்டு விளைவிக்கும் விவசாயி அடைய வேண்டிய பயன்களை பதுக்கல்காரர்களும், பெரு வர்த்தக நிறுவனங்களுமே அடைகின்றனர். அரசியல்வாதிகள் அவர்களைச் சார்ந்திருப்பதால் விவசாயி கைவிடப்படுகிறான். இந்நிலையை மாற்ற வேண்டும் என்கிறார் இந்நூலாசிரியர்.
அதற்கான 5 செயல்திட்டங்களையும் சண்முகவேல் இந்நூலில் அளித்திருக்கிறார்.
முதல் செயல் திட்டத்தில் விவசாயிகளை ஒருங்கிணைத்தல், நிலத்தை வரைமுறைப் படுத்துதல், இலக்குகளை நிர்ணயித்தல், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்தல் ஆகியவை குறித்து விளக்கி இருக்கிறார்.
இரண்டாவது செயல்திட்டத்தில், தகவல் மையங்கள், அரசு விவசாய மையம், அரசு விவசாய வங்கி ஆகியவை குறித்தும் அவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் தேவை குறித்தும் விளக்குகிறார்.
மூன்றாவது செயல் திட்டம் பயிர்க்கடன் வழகுவது, அதை வசூலிப்பது, அரசு விவசாய வாகனம் (இது தற்போது குஜராத்தில் உள்ளது; தமிழகத்தில் பரீட்சார்த்தமாக பொங்கல் விழா சமயத்தில் நடைமுறையானது) குறித்து அலசுகிறது.
இயற்கை மற்றும் செயற்கைக் காரணங்களால் விவசாயி பாதிக்கப்படும்போது அவனைக் கைதூக்கிவிட ஓர் உறுதியான கரம் தேவை. அதற்கு பயிர்க் காப்பீடு அவசியம். இதில் முறைகேடு நடக்காமல் தடுக்க தகுந்த அமைப்பும் ஆய்வும் அவசியம். இதனை செயல்திட்டம்- 4 விளக்குகிறது.
அடுத்து விளைபொருள்களை சேதமின்றிப் பாதுகாக்கவும், விலை குறையும் தருணங்களில் விலை வீழ்ச்சியைத் தடுக்கவும் கிடங்குகளின் தேவை குறித்து விளக்குகிறார். விளைபொருளின் மாற்றுப் பயன்பாடுகளையும் விவசாயிகளே கூட்டுறவு முறையில் மேற்கொள்வதும் (உதாரணம்: தக்காளி ஜாம் தொழிற்சாலை) குறிப்பிடப்படுகிறது. இந்தப் புதிய செயல் திட்டத்தால் அரசுக்கும் லாபம்; மக்களுக்கும் லாபம்; விவசாயிகளுக்கும் லாபம் என்கிறார், நூலாசிரியர். சொல்வது யார்க்கும் எளியதே. எனினும், இதை ஆராயும் கடமை அரசுக்கு அல்லவா இருக்கிறது?
இறுதியாக, ‘விவசாயிகளும் தொலைநோக்கில் சிந்திக்க வேண்டும்; நவீன உத்திகளைக் கையாள வேண்டும்; இயற்கை விவசாய முறைகளுக்குத் திரும்ப வேண்டும்; மாற்று விவசாய முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்; விவசாயம் சார்ந்த அரசு நிர்வாக முறையில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்- அப்போது தான் நிலையான வேளாண்மை தொடர முடியும்’ என்கிறார்.

மொத்தத்தில், வேளாண்மை பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் செய்ய வேண்டிய அரும்பணியை இந்நூலாசிரியர் செய்திருக்கிறார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கி இருக்கிறார். ”வீழ்ந்து கிடக்கும் விதைகளை மேலெழுப்புவதற்காகவே பெய்யும் மழைத்துளி போல, மாற்றுக்கருத்துக்கள், மாற்றுச் சிந்தனையாளர்களால் இந்த மண்ணை புதுப்பித்துக்கொண்டே இருக்கும் என்பதற்கான மெய்யான சான்றே இந்நூல்” என்று தனது அணிந்துரையில் குறிப்பிட்டிருக்கிறார் நம்மாழ்வார். இது ஒன்றே போதும் நூலின் சிறப்பை விளக்க.
இதுவல்லாமல், சுதேசி இயக்க மாநிலத் தலைவர்களுள் ஒருவரும் சுதேசி பொருளாதார சிந்தனையாளருமான பேராசிரியர் ப.கனகசபாபதி இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கி இருக்கிறார். ‘திருப்பூர் அறம் அறக்கட்டளை’ இந்நூலை சிறப்பாக வெளியிட்டிருக்கிறது. இப்பணியில் ஈடுபட்ட அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
இந்நூலின் துவக்கத்தில் 1870 ம் ஆண்டுகால கடும் பஞ்சக் காட்சிகளை வெளியிட்டு உருவகமாக நம்மை மிரட்டி இருக்கின்றனர் நூல் வெளியீட்டாளர்கள். விவசாயம் காக்கப்படாவிட்டால் கடைசியில் அது தானே நடக்கப் போகிறது?
விவசாயம் புறக்கணிக்கப்பட்ட துறையாக இருப்பதற்கு இத்துறையில் வரும் நூல்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதே சாட்சி. அந்தக் குறையைப் போக்குவதாகவும் இந்நூல் உள்ளது. விவசாயம் காக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் உள்ள ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் இந்த நூல்.
விவசாயிகளைப் பாதுகாப்போம்
- சு.சண்முகவேல், ஈரோடு.
பக்கங்கள்: 80
விலை: ரூ. 40
வெளியீடு: அறம் அறக்கட்டளை,97/98, மிஷன் வீதி, திருப்பூர்- 641 604.
தொலைபேசி: 72008 55666.
மின் அஞ்சல்: aramtirupur@gmail.com
வலைத்தளம்: http://aramtirupur.blogspot.in/
 October 2, 2012
அச்சிட அச்சிட 
Sourcehttp://www.tamilhindu.com/2012/10/save-the-formers-book-review/

No comments:

Post a Comment