Sunday, February 24, 2013

பரமேசுவரனுக்குப் பசுபதி என்று பெயர்


தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
தேவதாமூர்த்திகள் அவதார புருஷர்கள்
பசுபதி
பரமேசுவரனுக்குப் பசுபதி என்று பெயர். இங்கு பசு என்று சொல்வது அவருடைய வாகனமாக ரிஷபத்தையோ காவலாளான நந்தியையோ பசுக்கள். அவர்களுக்கு யஜமானனாக இருக்கும் ஈசுவரனே பசுபதி.
தழையைக் கண்ட இடமெல்லாம் ஒடுகிற பசுவைப் போல், இந்திரிய சௌக்கியத்தைத் தேடி ஒடிக்கொண்டேயிருக்கிறோம் நாம். பசுவின் சொந்தக்காரன் அதைக் கட்டிப் போடுவதைப்போல் பசுபதியான ஈசுவரன் நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறான்.
எங்கே கட்டியிருக்கிறான். கண்ணுக்குக் கட்டு எதுவும் தெரியவில்லையே என்று  தோன்றும். ஆனாலும் நம்மை அறியாமலேயே இந்தக் கட்டைப் பற்றி நாம் அவ்வப்போது பேசுகிறோம். ஒரு காரியத்துக்காக நாம் எத்தனையோ முயற்சி செய்கிறோம். அப்படியும் அது பலிதமாகவில்லை. இச்சமயத்தில், முடிந்ததெல்லாம் செய்தேன். ஆனால், கர்ம பந்தம் யாரை விட்டது?காரியம் ஜயிக்கவில்லை என்று சமாதானம் சொல்லிக் கொள்கிறோம். பந்தம் என்பதுதான் கட்டு. நம்முடைய பூர்வ கர்மாவினால் நம்மைக் கட்டியிருகிகிறார் பசுபதி.
கயிற்றால் கட்டப்பட்ட பசுவுக்கு, அந்தக் கட்டின்மீது கோபம்தான் வரும். ஆனால் கட்டை அவிழ்ந்துவிட்டால் என்ன ஆகிறது?அது அசலான் தோட்டத்தில் மேய்கிறது.
அவன் அதை வெளு வெளு என்று வெளுத்துக் கட்டுகிறான். பட்டியில் கொண்டுபோய் அடைகிறான். அப்போதுதான் தன்னைக் கட்டிப்போட்டிருந்தது எவ்வளவு நல்லது என்று தெரிகிறது.
இப்படியேதான் கர்மக் கட்டைப்பற்றி நமக்குக் கோபம் வருகிறது. ஈசுவரன் இப்படி ஒரு கட்டைப் போட்டுவிட்டால் நமக்குத் தோல்வி, துக்கம் இதெல்லாம் ஏற்படாது. தோல்வியும் துக்கமும் வருவதால்தான் நாம் இப்போது நமக்கு இவ்வளவுதான் பொசிப்பு என்கிற புத்தியைப் பெற்று, இருக்கிற மட்டும் திருப்தியுடன் நிம்மதியுடன் வாழக் கொஞ்சமாவது முயல்கிறோம். இவை இல்லாவிட்டால் நம்முடைய ஆசைக்கும், நாம் போடுகிற பிளானுக்கும் முடிவே இராது. இத்தனை பலமான கட்டும் இருக்கும்போதே, நம்மில் ஒவ்வொரு தனி மநுஷஷ்யனின் ஆசைக்கும் இந்த சிருஷ்டி முழுவதையும் ஆஹ§தி பண்ணினாலும் போதாமலிருக்கிறது. பூலோகம் போதாதென்று, இப்போதே சந்திர மண்டலம், மார்ஸ் என்று போகிறோம். கட்டு இல்லாவிட்டால் கேட்கவே வேண்டாம். இப்போதே இத்தனை போட்டி, பொறாமை, சண்டே என்றால் அப்போது எப்படி இருக்கும் என்று கற்பனைக்கூடச் செய்ய முடியாது. நம் ஆசை அவ்வளவையும் காரியத்தில் கொண்டு வருவதற்கு முயற்சி செய்யாதபடி கர்மம் நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறதோ, நாம் பிழைத்தோமா.
பசுவைக் கட்டிப் போட்டால் அது பயிரையும் பாழாக்குகிறது. தானும் அடிபடுகிறது. அதுபோல் கர்மாவால் ஈஸ்வரன் நம்மைக் கட்டிப் போடாவிட்டால் நம்மையும் கெடுத்துக் கொண்டு லோகத்தையும் கெடுத்து விடுவோம் - இப்போதே கொடுக்கிறோம். துர்பலத்திலேயே இவ்வளவு கெடுததால், சுயேச்சை பலம் பூரணமாக இருக்கும்போது எவ்வளவு கெடுப்போம். கயிறு போட்டுக் கட்டுவதால்தான், ஏதோ ஒரு சமயத்திலாவது பசுவுக்குக் கட்டுத் கறியிடம் வந்து படுக்க முடிகிறது. கர்மம் கட்டுவதால்தான், நாமும் எப்போதாவது அதற்கு முளையான ஈசுவரனிடம் சித்தத்தைப் படுக்க வைக்கிறோம். இல்லாவிட்டால், பகவானை அடியோடு மறந்து, இப்படியே சம்ஸாரத்தில் உழன்றுகொண்டு தானிப்போம்.
நம்முடைய க்ஷேமத்துக்காக, நமே நமக்கு அதிக உபத்திரவத்தை உண்டாக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக, பகவான் நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறார். எப்போது அவிழ்த்து விடுவீர். என்று அவரைக் கேட்டால், ஒருவருக்கும் ஒரு தீங்கும் செய்யாமல், அதனால் உனக்கும் பாபம் உண்டாக்கிக் கொள்ளாமல் இருக்கிற பக்குவம் வந்தால், அவிழ்து விடுவேன் என்கிறார்.
குழந்தை விஷயம் செய்தால், கட்டிப் போடுகிறோம். நம்மிடம் ஆசை என்ற விஷயம் இருப்பதால், நம்மைப் பசுபதி கட்டிப் போட்டிருக்கிறார். குழந்தைக்கு விஷம் புத்தி போய் விட்டால் அப்புறம் கட்ட மாட்டோம். நமக்கு ஆசை போய்விட்டால் ஈசுவரனும் நம்மை அவிழ்த்து விடுவார். ஆசையினால் பலருக்கு பலவித கஷ்டங்களை உண்டாக்கி, நாமும் கஷ்டப்படுகிறோம். ஆசை போயிவிட்டால், யாருக்கும் நம்மால் கஷ்டம் இல்லை. அப்போது கட்டும் இல்லை. அவிழ்த்து விடுவார்.
கட்டு போயிவிட்டது என்பதால் அசலான் தோட்டத்தில் மேயமாட்டோம். ஏனென்றால், அசலான் தோட்டத்தில் மேயாத புத்தி நமக்கு வந்த பிறகுதான் பசுபதி கட்டையே எடுக்கிறார். கட்டு போனபின் நாம் கட்டுப்பட்ட நிலையிலிருந்து உயர்ந்து கட்டியவனின் நிலைக்கே போய்விடுவோம். கட்டு இருக்கிற வரையில் நாம் வேறு, ஸ்வாமி வேறு என்று பூஜிக்கிறோம். கட்டு போய் விட்டால் நாமே அவன் என்று தெரிந்து கொள்வோம். அப்புறம் பூஜைகூட வேண்டாம். ஒரு நிலை வரையில் ஜீவன் பசு என்று சுருதியும் சொல்கிறது. அது எந்த நிலை?

'தேவதாம் அன்யாம் உபாஸதே'

என்று சொல்லியிருக்கிறது. இதற்குப் பொதுவாக, இஷ்ட தேவதையை விட்டுவிட்டு அதற்கு அந்நியமான தேவதையை உபாஸிக்கிறவன். பசு என்று பொருள் சொல்வார்கள். அது தவறு. தான் பூஜிக்கிற தேவதை தனகக்கு அந்நியமானது எனறு நினைத்து எவன் பூஜை செய்கிறானோ அவன் பசு என்பதே சரியான அர்த்தம். இப்படி பகவான் வேறு, பக்தன் வேறு என்ற பேத புத்தி இருக்கிற வரையில் கர்மா உண்டு. கர்மா உள்ள வரையில் கட்டும் உண்டு.
அதற்காக, இப்போதே நமக்கு பேத புத்தி போய்விட்டதாக நாம் பிரமை கொள்ளக் கூடாது. பாசாங்கு பண்ணக்கூடாது. உண்மையாகவே பேத புத்தியைப் போக்கிக் கொள்ள வேண்டும். அப்படிப் போகாத வரையில் சாஸ்திரோக்கதமான கர்மங்களைச் செய்யத்தான் வேண்டும்.
ஸ்வாமிகள் என்ன இப்படிச் சொல்கிறார்? இத்தனா நாழி கர்மா இருந்தால் கட்டும் உண்டு என்று சொன்னார். இப்போது இவரே அநுபவத்தில் அபேத ஞானம் வருகிற சாஸ்திரம் விதிக்கிற தர்ம காரியங்களின் கட்டு உதவி செய்கிறது. அதெப்படி ஒரு கட்டு இன்னொரு கட்டை அவிழ்க உதவும் என்று கேட்கலாம். ஒரு திருஷ்டாந்தமம் சொல்கிறேன். ஒருத்தன் விறகுகளைக் கட்டிக் கொண்டு வருகிறான். மணி முடிச்சாகக் கட்டிவிட்டான். கயிற்றை அவிழ்க்க முடியவில்லை. இப்போது என்ன செய்வாள் தெரியுமா. அந்தப் பழைய கட்டுக்குப் பக்கத்திலேயே அதைவிட இறுக்கமாக மற்றொரு கயிற்றைச் சுற்றி நெருக்குவார்கள். இந்த இரண்டாவது கயிற்றை முடிச்சுப் போடமாட்டார்கள். அப்படியே கெட்டியாக விறகுகளைச் சுற்றி இறுக்கிப் பிடித்துக் கொள்வார்கள். இந்த இறுக்கலில் பழைய மணி முடிச்சுக் கட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகத் தொள தொள என்று நெகிழ்ந்து கொடுக்கும். அதை அப்படியே அலக்காக விறகுச் சுமையிலிருந்து கழற்றி விடுவார்கள். பிறகு புதிதாக இறுக்கிப் பிடித்துக் கொண்ட கயிற்றையும் விட்டுவிடுவார்கள். ஆக, புதிய கட்டு பழைய கட்டை அவிழ்க்க உதவி விட்டது. அப்புறம் இதையும் சுலபமாக எடுத்துப் போட்டு விட முடிந்தது.
சாஸ்திரம் சொல்கிற தர்ம காரியங்களின் கட்டு, இரண்டாவது கயிறு போன்றது. அது முடிச்சுப் போட்டுக் கட்டுவது அல்ல. கட்டுகிற மாதிரி இருக்கும். சாஸ்திர விதிகள் ரொம்பவும் கறாராக, கண்டிப்பாக கட்டுப்படுத்துகிற மாதிரிதான் இருக்கும். ஆனால் இந்திரியங்கள் போடுகிற மணி முடிச்சான ஆசைக்கட்டிலிருந்து விடுபட்டு, கடைசியில் பூரண நிம்மதி, சௌக்கியம், விடுதலை பெற வேண்டுமானால், இந்தக் கட்டு இருந்தேயாக வேண்டும். ஆசைக் கட்டுப் போட்டபின் சாஸ்திரக் கட்டும் போய்விடும். ஆனால் முதலில் அது போவதற்காக இந்த இரண்டாவது கட்டை நாமாகப் போட்டுக் கொள்ள வேண்டும். தார்மிகமாக, மநுஷ்ய காரியம், தேவ காரியம், பூஜை, யக்ஞம், பரோபகாரம், ஜீவாத்ம கைங்கரியம் எல்லாம் பண்ண வேண்டும். ஆசை போனபின் இந்தத் தெய்வ காரியங்கள், வைதிக காரியங்கள், சமூகக் காரியங்கள் எல்லாம் கூட நின்று விடலாம்.
இந்த நிலையை ஒருவன் அடைகிறபோது இப்படிப்பட்ட சாதகனிடம் கோபம் வருமாம். (தேவதைகள் வேறு. தெய்வம் எனறு பொதுவில் சொல்லப்படும் ஸ்வாமி வேறு) மனிதன் வைதிக காரியம் செய்தால்தான் தேவதைகளுக்கு ஆஹ§தி கிடைக்கும். இல்லாவிட்டால் அவர்கள் பட்டினிதான். எனவே இவன் கர்மாவை விட்டு, யக்ஞம், தர்ப்பணம், பூஜை இவற்றை நிறுத்தி விட்டால் தேவர்களுக்குச் சாப்பாடு கிடைக்காது. எனவேத்தான் கோபம் வரும். மாடு கறவை நின்றுவிட்டால்அப்புறம் அது பிரயோஜம் இல்லை என்று bQ போடுவதை நிறுத்தி விடுகிறோம் அல்லவா. மனிதனின் ஆசை எல்லாம் நினறு விட்டால், எந்த தேவதையில் அநுக்கிரகம் இவனுக்கு வேண்டாம் என்றாகி, அவற்றுக்கு இவன் ஆஹ§தி தருவதும் நின்றுவிடும். மனிதனின் கர்மம் நின்றுவிட்டால் அப்புறம் தேவதைகளுக்கு அவனால் பிரயோஜனம் இல்லை. இது காரணமாகத்தான், புராணங்களில் பல ரிஷிகள் பிரம்ம ஞானத்தை அடையத் தபஸ் செய்த போது தேவதைகள் பிரதிபந்தகம் (இடையூறு) விளைவித்த தாகப் பார்க்கிறோம்.
இதனால்தான் ஸம்ஸ்கிருதத்தில் அசட்டுக்கும் அஞ்ஞானிக்கும், தேவனாம் ப்ரியன் என்றே ஒரு பெயர் ஏற்பட்டிருக்கிறது. தேவனாம் ப்ரியன் என்றால் தேவதைகளுக்கு இஷ்டமானவன் என்று அர்த்தம். அது ஏதோ புகழ்ச்சொல் போலத் தோன்றும். தேவனாம் பெரிய அசோக் என்று அசோகச் சக்கரவர்த்திக்கூடக் கல்வெட்டுகளில், ஸ்தூபிகளில் எல்லாம் தம்மை வர்ணித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், உண்மையில் எவன் தேவதைகளுக்கு திருப்தி செய்கிற நிலைக்கு மேற்பட்ட ஞானத்தை ஒரு நாளும் தேடிப் போகாமல், கர்மத்திலேயே உழலுகிற அசடே, அவனே தேவனாம் ப்ரியன்.பழைய காலத்தில் ஞானம் வந்தவர்களும்கூட சாஸ்திரக் கர்மாவை விடத் தயங்கினார்கள். மற்றவர்களுக்கு வழி காட்டுவதற்காக, இவற்றை தங்களுக்கு அவசியமில்லாமலும்கூடத் தொடர்ந்து செய்து வந்தார்கள். நாமோ, சிறிது கூடத் தயக்கமில்லாமல், ஹாய்யாக சகல சாஸ்திர தர்மங்களையும் விட்டுவிட்டோம். ஆனால் ஞானியாகத்தான் ஆகவில்லை.
ஞானியில்லை என்றால், தேவனாம் ப்ரியர் களாகவாவது இருந்தால், அவர்களுடைய பிரீதியால், நாம் செத்துப்போன பின் தேவலோகத்துக்குப் போகலாம். தேவலோகம் என்பது ஒரு கேளிக்கை லோகம். அது மோக்ஷமல்ல. மோக்ஷம் என்பது இந்திரியங்களுக்கு எட்டாத அத்மானந்தத்தை சாசுவதமாகத் தருவது. தேவலோகம் என்பது நம் வைதிக கர்மாவினால் கிடைத்த புண்ணியம் தீர்ந்தபின் பூலோகத்துக்குத் திரும்பத்தான் வேண்டும். மோக்ஷ சுகத்துக்கும், தேவ லோகம் என்கிற ஸ்வர்கத்தின் இன்பத்துக்கும், அஜகஜாந்தரம். இருந்தாலும் துக்கமும் கஷ்டமும் நிறைந்த மநுஷ்ய லோகத்திலிருந்து நாம் தேவ லோகத்திற்காகவது போனால் விசேஷம்தான். நாம் இதற்காகவே வழி பண்ணிக் கொண்டிருக்கிறோமா? அதுவும் இல்லை. தேவதைகளுகக்குத் திருப்தி தருகிற வைதிக கர்மங்களை விட்டுவிட்டபின் அவர்களுக்கு எப்படிப் பிரியமானவர்கள் ஆவோம். நாம் நரகவாஸீனாம் ப்ரியர் களாகவே இருக்கிறோம் - நரகத்திலிருப்பவர்கள், நமக்குத் துணையாக இவர்களும் வரப் போகிறார்கள் என்று நம்மைப் பற்றிப் பிரியமான எண்ணுகிற ஸ்திதியில்தான் இருக்கிறோம்.
துஷ்டர்களாக இருப்பதைவிட, அசடுகளாக ஆவது சிலாக்கியம். முதலில் நாம் அசடுகளான தேவனாம்பிரியர்களாக ஆக வேண்டும். அப்புறம் பசுபதி கொஞ்சம் கொஞ்சமாக் கட்டை அவிழ்த்து விடுவார். (தேவ லோகத்தை விரும்பாமல், பற்றின்றி கர்மா செய்தால், இக்கர்மாவே சித்த சுத்திதந்து பிரியத்துக்கும் ஞானத்திற்கு வழிகோலும்) அப்புறம் தேவதைகளின் பிரியத்தையும், அப்பிரியத்தையும் பொருட்படுத்தாத ஞானி ஆகலாம். அப்போது பசு (ஜீவன்) - பாசம் (கயிறு) - பதி (ஈஸ்வரன்) என்கிற மூன்றில் பசுவும் பாசமும் போய், பசி மட்டுமே இருக்கும். பசுவான நாமே பதியாகி இருப்போம்.
சைவ சித்தாந்தத்தில் பசு - பதி - பாசம் என்று எதைச் சொல்கிறார்களோ, அதுதான் ஆதிசங்கரரின் அத்வைத வேதாந்தத்தில் ஜீவன் - பிரம்மம் - மாயை என்று சொல்லப்படுகிறது. சங்கரரும் பசு - பாசம் என்ற பதங்களையே ஸெளந்தரிய லஹரி சுலோகம் ஒன்றில் பிரயோகித்திருக்கிறார்.
சிரம் ஜீவந்நேவ பசு பாச வ்யதிகர:
பராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம த்வத் பஜனவான்
(அம்பிகே உன்னை எவன் பூஜிக்கிறானோ அவன் பசு, பாசம் என்றவற்றின் சேர்க்கையால் உண்டாகிற விபரீதத்தைப் போத்திக் கொண்டு ஸதா காலமும் பரமானந்தம் என்ற ரஸத்தையே ருசிக்கிறான்.) 

Source:http://www.kamakoti.org/

No comments:

Post a Comment