Friday, March 29, 2013

கற்பதைக் கற்கண்டாய் மாற்றிய ஓர் அரசுப் பள்ளி


கற்பதைக் கற்கண்டாய் மாற்றிய ஓர் அரசுப் பள்ளி

இக்கூற்று சரியானதே. இருப்பினும் தமிழகத்தில் பள்ளிக் கல்வி நிலை குறித்து நாம் திருப்தி அடைந்துவிடக் கூடாது. திருப்தி அடைந்தால் இத்துறையில் உள்ள குறைபாடுகளைப் போக்கிட முடியாது. உதாரணமாக, "அசர்' (ஆய்வு நிறுவனம்) செய்த ஆய்வின் அடிப்படையில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் 53 விழுக்காடு குழந்தைகள் இரண்டாம் வகுப்பிற்கான பாடத்தை வாசிக்க இயலாத நிலையில் உள்ளனர். கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் இந்த விழுக்காடு 58 சதவிகிதமாக இருந்தது. மேலும், மாணவர் சேர்க்கை விகிதத்தைப் பொருத்தவரை மக்கள் அரசுப் பள்ளிகளை விடுத்து தனியார் பள்ளிகளை நாடும் போக்கு அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிக் கல்வி, குறிப்பாக அரசுப் பள்ளிகளில் நிலவும் மேற்கண்ட குறைபாட்டுக்கு கல்வித் தரம் உயராதது முக்கியமான காரணங்களில் ஒன்று. கற்பிக்கும் முறை, கல்வி பெறும் சூழல், தாய்மொழியில் திறன், குழந்தைகளின் வாசிப்புத் திறன் போன்ற அம்சங்களைக் கொண்டே கல்வித் தரம் மதிப்பீடு செய்யப்படுகிறது. இந்த அம்சங்கள் அல்லாமல் பள்ளிகளில் அடிப்படைக் கட்டுமானங்களும் கல்வித் தரம் உயர அவசியம்.
கல்வித் தரத்தை உயர்த்துவதில் அரசுக்கு முக்கியப் பங்கு உள்ளது. மாறி வரும் சூழலுக்கேற்ப ஆசிரியர்களுக்குப் பயிற்சி, தேவையான அடிப்படைக் கட்டுமானங்களை உருவாக்குவது, ஆசிரியர்களை ஊக்குவிப்பது, பள்ளிக்கு உள்ளேயும் வெளியேயும் நல்ல ஆரோக்கியமான சூழலை உருவாக்குவது போன்றவைகளுக்கு ஆசிரியர்களை அரவணைத்து மாற்றங்களை உருவாக்குவதில் அரசுக்கு முக்கியப் பங்கு உள்ளது.
கல்வித்தரம் உயர மாநில, மாவட்ட அளவிலான இத்துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் பொறுப்பு உள்ளது. கல்வித் தரம் சம்பந்தப்பட்ட ஒவ்வோர் அம்சத்திலும் "அசர்' போன்ற ஆய்வு சுட்டிக்காட்டும் குறைபாடுகளைப் போக்கிட இத்துறை சார்ந்த அதிகாரிகளின் தலையீடும் அவசியமானது.
கல்வித் தரம் உயர தேவையான பல அம்சங்களில் ஆசிரியர்களின் பங்கும் முக்கியமான ஒன்று. ஆசிரியர்களின் பாத்திரம், பங்களிப்பு சிறப்பாக உள்ள பள்ளிகளில் தரமும் உயர்கிறது. அரசுப் பள்ளிகளைத் தவிர்த்து மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்குச் செல்லும் போக்கும் தடுக்கப்படுகிறது.
தமிழகத்தில் சிறப்பாகச் செயல்படும் அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஒன்றான இராமம்பாளையம் ஆரம்பப் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பு இக்கட்டுரையாளருக்குக் கிடைத்தது. கோவை மாவட்டத்திலுள்ள ஜடையன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது இராமம்பாளையம் கிராமம். கோவையிலிருந்து 38 கி.மீட்டர் தொலைவிலுள்ள இராமம்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளி தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இப்பள்ளி 1930-இல் துவங்கப்பட்டது. சுமார் 1,000 பேர் வசிக்கக் கூடிய இக்கிராமத்திலுள்ள மக்கள் சமீப காலம் வரை தங்களது குழந்தைகளை இப்பள்ளியில் சேர்க்காமல் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சேர்க்கத் துவங்கினார்கள்.
இந்நிலை இராமம்பாளையத்திலுள்ள அரசுப் பள்ளிக்கு மட்டுமல்ல, தமிழகத்திலுள்ள பெரும்பான்மையான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இதே நிலைமைதான். காரமடை ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகள் மற்றும் நகராட்சிப் பள்ளிகளில் கடந்த ஐந்தாண்டுகளில் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ச்சியாகக் குறைந்து வந்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் 3 வகையான அரசுப்பள்ளிகளில் 1,898 மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது கவலையளிக்கக்கூடியது. ஒருபகுதி மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்குச் செல்கிறபோது ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த, குறிப்பாக தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகள் வேறு வழியில்லாத இல்லாத நிலையில் அரசுப் பள்ளிகளில் சேர்கின்றனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது காரமடை ஒன்றியத்தில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் இதே நிலைமைதான். இந்நிலைமையை மாற்றிட அரசுக்கும் பொறுப்பு இருக்கிறது, ஆசிரியர்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. ஆசிரியர்கள் முயன்றால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவதை தடுப்பது மட்டுமல்ல, எண்ணிக்கையை உயர்த்தவும் முடியும் என்பதற்கு இராமம்பாளையம் அரசு ஆரம்பப்பள்ளி சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
இராமம்பாளையம் பள்ளியில் கடந்த ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கை 27 மட்டுமே. நடப்பு ஆண்டில் மாணவர்கள் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. இதில் தலித் மாணவர்கள் 53 பேர். பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 8 பேர், மலைவாழ் வகுப்பைச் சார்ந்தவர் 1. மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிற நிலையில், இராமம்பாளையம் பள்ளியில் மட்டும் உயர்வதற்கு என்ன காரணம்?
தற்போது ஈராசிரியர் பள்ளியாகச் செயல்படும் இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக 56 வயதுடைய சரஸ்வதியும், உதவி ஆசிரியராக 35 வயதான இளைஞர் பி.பிராங்ளின் என்பவரும் பணிபுரிந்து வருகிறார்கள். தலைமை ஆசிரியர் இராண்டாண்டுகளுக்குப் பிறகு ஓய்வுபெற உள்ளார். கணிதம் படித்து ஆசிரியராகப் புதிதாகப் பணியில் சேர்ந்த பிராங்ளின் கல்வித் தரத்தை உயர்த்துவது என்ற முடிவோடு பணியைத் துவங்கினார். இந்த இரண்டு ஆசிரியர்களும் எடுத்த முயற்சிதான் மேற்கண்ட மாற்றத்திற்கு காரணம். இளம் ஆசிரியர் பிராங்ளின் எடுத்த முயற்சிக்கு தலைமை ஆசிரியர் முழு ஒத்துழைப்பு கொடுத்து செயலாற்றியதும் ஆசிரியர்கள் முயற்சிக்கு இராமம்பாளையம் கிராம மக்கள் ஆதரவு அளித்ததும்தான் இந்த மாற்றத்திற்கு காரணம்.
குழந்தைகள் எளிதில் அமர்ந்து கல்வி கற்க ஏதுவான வட்ட மேசையும், குழந்தைகள் உட்கார இருக்கையும், இருக்கையில் புத்தகங்களை வைத்துக்கொள்ள சிறிய காப்பறையும் உள்ளன. குழந்தைகள் தங்கள் புத்தகங்களை வீட்டுக்குச் செல்கிறபோது சுமந்து செல்ல வேண்டியதில்லை. தேவையான புத்தகம், நோட்டுகளை மட்டும் எடுத்துச் சென்றால் போதும். தரையிலிருந்து குழந்தைகளுக்கு எட்டும் உயரம் வரை சுவற்றிலேயே கரும்பலகை, சுவர்முழுவதும் பசுமையான பின்னணியில் வனம் மற்றும் பல விலங்குகளின் ஓவியம், டைல்ஸ் பதித்த தரை என குழந்தைகள் பள்ளிக்குச் சென்றால் வகுப்பறையில் விரும்பி மகிழ்ச்சியாகக் கற்க ஏதுவான சூழலில் இரண்டு வகுப்பறைகளும், திட்டமிட்ட முறையில் உருவாக்கப்பட்டுள்ளன.
கோடை காலத்தில் பயன்படுத்த குளிர்சாதன வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, வகுப்பறையில் நுழைவு வாயிலிலேயே ஆள் உயரக் கண்ணாடி, சமச்சீர் கல்வி முறை, குழந்தைகளுடன் சரிசமமாக அமர்ந்து கல்வி கற்பிக்கும் முறை ஆகியவை வகுப்பறையின் ஒட்டுமொத்த சூழலையே முற்றாக மாற்றிவிட்டது. மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி, நாளிதழ்களை வாசிக்கப் பழக்கப்படுத்துவது என சிறப்பு முயற்சிகளையும் ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ளனர். இதனால் கற்பது சுமையல்ல, கற்பது கற்கண்டே என்ற உணர்வை மாணவர்களுக்கு உருவாக்கிவிட்டார்கள்.
ஆசிரியர்களுக்கென்று தனி மேசை, நாற்காலி பள்ளியில் இல்லை. பாடப் புத்தகங்கள் வைப்பதற்கும், கற்பதற்கான புத்தகங்களும் அதற்காகவே உருவாக்கப்பட்ட ரேக்குகளில் மிக நேர்த்தியாக அடுக்கப்பட்டிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.
11 கணிப்பொறிகள் கொண்ட தனியான அறையும், எல்சிடி புரொஜக்டருடன் கூடிய கணிப்பொறி அமைப்பும் உள்ளன. கணினி அறை மற்றும் வகுப்பறைகளுக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்க யுபிஎஸ் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகளே விரும்பி கடைபிடிக்கும் அளவிற்கு தூய்மையாக இருக்க வேண்டியதன் தேவை உணர்த்தப்பட்டதால் டெட்டால் போட்டு கைகழுவும் பழக்கமும், குப்பைகளைத் தவறாமல் குப்பைக் கூடையில் சேகரிக்கும் வழக்கமும் உள்ளன.
கடந்த 4 - 5 ஆண்டுகளாக பிராங்ளின் மற்றும் தலைமையாசிரியர் சரஸ்வதி ஆகியோர் எடுத்த முன்முயற்சியால் ஓர் அரசுப் பள்ளி இவ்வளவு வியத்தகு முன்னேற்றங்களை கண்டுள்ளது. அடிப்படையில் விவசாயிகளாக இருக்கும் இவ்வூர் மக்கள் அனைவரும் ஆசிரியர்களின் சீரிய முயற்சிக்கு மேலான ஒத்துழைப்பை அளித்து வருகின்றனர்.
குறிப்பாக கிராமக் கல்விக்குழு தலைவர் மகேஷ், ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆர்.ஆர்.ஈஸ்வரன் மற்றும் கிராமத்தைச் சார்ந்தவர்கள் ஆசிரியர்களுக்கு உறுதுணையாக உள்ளனர். ஜடையம்பாளையம் ஊராட்சித் துணைத் தலைவராக உள்ள ஆர்.கே.பழனிச்சாமி பள்ளிக்கு நிதியுதவி செய்து வருகிறார். ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் மாதிரி வகுப்பறை உருவாக்கப்பட்டு செயல்படத் துவங்கிய நிலையில், அங்கு ஆய்வு செய்ய வந்த மாவட்ட ஆட்சியர் இதே போல் இன்னொரு வகுப்பறையை உருவாக்க ரூ.3 லட்சம் நிதியை ஒதுக்கித் தந்துள்ளார். பள்ளிக்கான சுற்றுச் சுவரும் ஊர்மக்களின் உதவியுடன் கட்டப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேரும் குழந்தைகள் தலித் மற்றும் பிற்படுத்த ஏழைக் குடும்பங்களைச் சார்ந்தவர்கள்தான். இப்பள்ளிகள் தரமானதாக இருந்தால்தான் குழந்தைகளின் எதிர்காலம் ஒளிமயமாக அமையும். ஏழைக் குழந்தைகளின் எதிர்காலம் ஆசிரியர்களின் கையில்தான் உள்ளது.
இராமம்பாளையம் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக உயர்த்தினால் மேலும் வகுப்பறைகள் கட்டுவதற்கான இடத்தை வழங்கவும் ஊர் மக்கள் தயாராக உள்ளார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் எல்லாம் இராமம்பாளையம் பள்ளிகளாக உருவாகிட ஆசிரியர்களின் முயற்சி முக்கியமானது. இராமம்பாளையம் பள்ளி மாநிலம் முழுவதுமுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் அரசுக்கும் சமூகத்திற்கும் உணர்த்தும் பாடத்தைப் புரிந்துகொண்டால் மாற்றம் நிச்சயம்.
அரசின் ஆதரவு, ஊர் மக்களின் உதவியும் அடிப்படையானது. இராமம்பாளையம் ஆரம்பப்பள்ளி நல்லாசிரியர்களைப் போற்றுவோம். அனைத்து அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் இதுபோன்று மாறட்டும்.
By ,ஜி. ராமகிருஷ்ணன்
கட்டுரையாளர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர்
.First Published tn தினமணி on:29 March 2013 
நன்றி தினமணி

பலிவாங்கும் "கசப்பு விதைகள்'


பலிவாங்கும் "கசப்பு விதைகள்'

மிஷா.எக்ஸ். பிலட் என்பவர் அண்மையில் தயாரித்து வெளியிட்டுள்ள ஒரு ஆவண சினிமாப்படம் ""பிட்டர் சீட்ஸ்''. அதாவது கசப்பு விதைகள். விதர்பா பிராந்தியத்தில் பருத்தி விவசாயிகளின் தற்கொலை பற்றிய ஆவணப்படமாகும்.
 பிலட் அமெரிக்காவில் வாழும் இஸ்ரேலிய படத் தயாரிப்பாளர். ஏற்கெனவே, சில்லறை வணிகத்தில் வால்மார்ட் மூன்றாம் உலக நாடுகளுக்கு வந்தால் ஏற்படும் விபரீதங்களை மனதில்கொண்டு ""ஸ்டோர்வார்: வென் வால்மார்ட் கம்ஸ் டு டவுன்'' என்ற படத்தையும் சீனாவில் உடை தயாரிப்பை மையமிட்டு, ""சைனா புளூ'' என்ற படத்தையும் வெளியிட்டார்; அதே கையோடு இந்தியா வந்து விதர்பா பிராந்தியத்தில் மாதக்கணக்கில் தங்கி ஆயிரக்கணக்கான பருத்தி விவசாயிகளை - குறிப்பாகத் தற்கொலை செய்து கொண்ட விவசாயக் குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசி அரிய தகவல்களைத் திரட்டினார்; பின்னர் படமெடுத்து வெளியிட்ட பின்னரும் விழிப்புணர்வுப் பிரசாரமாக, "பி.டி.' பருத்தி விதையைக் கைவிட வேண்டும் என்ற நோக்கில் மறுபடியும் விதர்பா வந்து கிராமங்களில் மேற்படி ஆவணப்படத்தைப் போட்டுக் காட்டி வருகிறார்.
 இவர் ஏராளமாக சினிமாப் படம் எடுத்திருந்தாலும் இவருடைய லட்சியம் உலகமயமாதலினால் சுரண்டப்படும் நாடுகளில் உள்ள மக்கள் துயரத்தை வெளிப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
 ஜனவரி மாதம் மீண்டும் இவர் இந்தியாவுக்கு வந்தபோது பல பத்திரிகையாளர்கள் இவரைச் சந்தித்துப் பேசினர். ""கசப்பு விதை'' என்ற தலைப்புக்குப் பதிலாகப் ""பிணம் தின்னும் பி.டி. விதைகள்'' என்று மாற்றியிருக்கலாம் என்ற அளவில் ஆவேசம் கொண்டார்.
 பிலட் திரட்டியுள்ள தகவல்களின் அடிப்படையில், விதர்பா என்றால் "உலகப் பருத்தி விவசாயிகளின் தற்கொலைத் தலைநகரம்' என்றே சொல்லத் தோன்றுகிறது.
  பல நூற்றாண்டுகளாக உலகத்திலேயே பருத்தி உற்பத்திக்கு மிகவும் பிரசித்தமாக விளங்கிய விதர்பா விவசாயிகள் வசதியுடன் வாழ்ந்த பாரம்பரியம் உள்ளவர்கள், ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
 இதற்கு முதன்மையான காரணம் வறட்சியில் விளையக்கூடிய "தேசி' பருத்தி (உள்நாட்டுப் பருத்தி) சாகுபடியைக் கைவிட்டு "பி.டி.' பருத்தி சாகுபடி செய்ததுவே என்கிறார்.
  ""பி.டி. பருத்தி பயிரிட்டால் காய்ப்புழு தாக்காது; பூச்சித்தொல்லை இருக்காது'' என்று பி.டி. விதை ஏகபோக நிறுவனமாகிய "மான்சென்டோ' கூறுவதெல்லாம் பொய் என்று நிரூபித்துள்ளார்.
 பி.டி. விதை விலை மிக அதிகம். பி.டி. பருத்தி சாகுபடி செய்யும்போது கூடுதல் தண்ணீர் வேண்டும். ஏனெனில் பி.டி. பருத்திச் சாகுபடி, ரசாயன உரத்தை நம்பியுள்ளது. ரசாயன உரம் வேலை செய்யத் தண்ணீர் அதிகம் வேண்டும். ஆகவே ஆழ்துளைக் கிணறுகள் அதிகப் பணச் செலவில் தோண்டப்படுகிறது. ஆகவே மிகவும் செலவு மிகுந்த முதலீடு தேவைப்படுகிறது.
 இந்தச் செலவுக்கு விதர்பா விவசாயிகள் கடன் வாங்குகிறார்கள். பருத்தி விளைந்தால் புடவையாகக் காய்ப்பதில்லை. விளைந்த பருத்திக்கு விலை இல்லாமல் நஷ்டம். வறட்சி வந்தால் விளையாமல் நஷ்டம். வாங்கிய கடனைத் திருப்ப முடியாமல் தற்கொலைகள் நீடிக்கின்றன.
 விதர்பாவின் தட்பவெப்பத்திற்கு பருத்தி உகந்த பயிர் என்றாலும் சுமார் 10 சதவீத விவசாயிகள் மட்டுமே ஆழ்துளைக் கிணறுகள் தோண்டி பி.டி. பருத்திக்குத் தேவையான தண்ணீரை ஓரளவு பெறலாம். இந்த 10 சதவீதத்தில் 5 சதவீத விவசாயிகள் நிலை பரவாயில்லை. சுத்தமாகப் பாசன வசதியில்லாதவர்கள் 90 சதவீத விவசாயிகள். இவர்களுக்கு பி.டி. பருத்தி உகந்தது இல்லை. மழை பெய்தால் வாழ்வு. மழை பொய்த்துவிட்டால் சாவு.
 வறட்சிக்கு உகந்த "தேசி' ரக பருத்தி விதைகளே அழிந்துவிட்டன என்பது கசப்பான உண்மை. விதர்பா விவசாயிகள் "தேசி' ரகப் பருத்தியை சாகுபடி செய்வதற்குத் தயாராக உள்ளனர். போதிய விதைகள் இல்லை. இருப்பினும் விதர்பாவில் சில இயற்கை விவசாயிகள் இருக்கும் விதைகொண்டு "தேசி' ரக விதைகளைப் பயன்படுத்தி சற்று லாபமும் பெறுகின்றனர்.
 விதர்பா விவசாயிகளிடமிருந்து பெற்ற புள்ளிவிவரங்களிலிருந்து அறியப்பட்ட உண்மை எதுவெனில் 1 ஏக்கர் பி.டி. பருத்திச் சாகுபடிக்கு ஏற்படும் செலவு ரூ. 27,000-லிருந்து 33,600 ஆகும். இதில் விதை விலை மட்டும் ரூ. 2,400 ஆகும். அதேசமயம் 1 ஏக்கர் "தேசி' பருத்தி இயற்கை வழியில் ஏற்படும் சாகுபடிச் செலவு சராசரியாக ரூ. 10,000 மட்டுமே. விதைச்செலவு ரூ. 350-தான். நிகர லாப - நஷ்டம் பி.டி. என்றால் ரூ. 13,000 லாபமும் வரலாம். 10,000 நஷ்டமும் வரலாம். அதிக அளவில் நஷ்டமும் குறைந்த அளவில் லாபமும் உண்டு.
 "தேசி' பருத்தியில் அதிக அளவில் 12,000 லாபமும் பெறலாம், குறைந்த அளவில் 3,000 நஷ்டமும் பெறலாம். நஷ்டம் குறைந்த அளவும் லாபம் அதிக அளவிலும் உண்டு. அதிக அளவில் நஷ்டம் தற்கொலைக்குக் காரணமாகிறது. விலை உள்ளபோது விளைச்சல் இருக்காது. விளைச்சல் உள்ளபோது விலை இருக்காது. வாழ்வு தரவேண்டிய பி.டி. பருத்தி விதை விதர்பா விவசாயிகளின் வாழ்வையே பறித்துவிடுவதைச் சித்திரிக்கும் "கசப்பு விதை' ஆவணப்படம் விதர்பாவின் கண்ணீர்க்கதை.
 பிலட் நிகழ்த்திய ஆய்வுப்படி, விதர்பா விவசாயிகளின் தற்கொலைக்குத் தலையான காரணம் பி.டி. பருத்தி விதைகளின் அறிமுகம் என்றும், உலகமயமாதலின் ஓர் அம்சமாக இந்தியாவில் பி.டி. பருத்தி விதை வியாபாரம் செய்யும் மான்சென்டோ அமெரிக்க நிறுவனத்தையே குற்றவாளியாக மேற்படி "கசப்பு விதைகள்' அல்லது "பிணம் தின்னும் பி.டி. விதைகள்' என்ற ஆவணப்படம் சித்திரித்துள்ளது.
 ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் விதர்பா பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளக் காரணமான பி.டி. பருத்தி விதையை அரசு ஏன் ஊக்குவிக்கிறது என்று புரியவில்லை என்று கேட்கும் பிலட்டுக்கு நாம் என்ன பதில் கூறுவது?
 இந்தியாவின் விவசாய அமைச்சரே விதர்பா பகுதியைச் சேர்ந்தவர் என்பது எவ்வளவு முரணான நகைச்சுவை? அதுமட்டுமல்ல. கடந்த ஆண்டு மான்சென்டோவுடன் இணைந்து பி.டி. பிக்கனீர் பருத்தி மரண விதையைக் கண்டுபிடித்த இந்திய விவசாய அறிவியல் கழக விஞ்ஞானியும் இயக்குநருமான பி.ஏ. குமாருக்கு விவசாய அமைச்சர் சரத் பவார் "சர்தார் படேல்' விருது வழங்கியுள்ளார்.
 மகாராஷ்டிரத்தில் மட்டுமல்ல. மத்தியப் பிரதேசத்திலும், ஆந்திரப் பிரதேசத்திலும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் பி.டி. பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதேசமயம் மான்சென்டோ உறவை விவசாய அமைச்சர் விரும்புவதைக் கவனித்தால், ""ரோமாபுரி பற்றி எரியும்போது ரோம சாம்ராஜ்ஜிய மாமன்னன் நீரோ பிடில் வாசித்தார்'' என்று ""ரோம சாம்ராஜ்ஜியச் சீரழிவு'' என்ற வரலாற்று நூல் எழுதிய எட்வர்ட் கிப்பன் நினைவுக்கு வருகிறார்.
 மரண பயமுள்ள பி.டி. விதைக்குச் சரியான மாற்று "தேசி' ரகப் பாரம்பரிய விதைகளே. ஆனால், விதைகளை எங்கே தேடுவது? பி.டி. அறிமுகமான நோக்கமே "தேசி'யை அழிப்பதுதானே. தேனீக்களும் கழுகுகளும் நினைவுக்கு வருகிறது. தேனீக்களின் எதிரி கழுகுகள். தேன் கூட்டைக் கலைப்பது கழுகுகளே. மற்ற எந்தப் பறவையும் தேன்கூட்டை நெருங்குவதில்லை. கழுகுகளின் விருப்ப உணவு தேனுடன் தேன் குஞ்சுகள். தேன் கூடு என்பது தேன் மட்டுமல்ல. தேனீக்களின் இனப்பெருக்கமும் தேன் கூடுகளில் நிகழ்கிறது.
 ஒரு காலத்தில் இந்தியாவில் உள்ள எல்லாப் பருத்தி விவசாயிகளும் நாட்டு ரகப் பருத்தி விதைத்தபோது புடவையாகக் காய்த்தது உண்மைதான். நல்ல லாபம் கிட்டியது.
    "தேசி' விதை விதைத்துத் தேன்கூடு கட்டிச் சுகமாக வாழ்ந்து வந்தனர். மான்சென்டோவும் விவசாய அமைச்சரும் கழுகுகளாக அவதாரமெடுத்தனர். மான்சென்டோ கழுகு தேனீக்குஞ்சுகளாக இருந்த "தேசி' விதைகளைத் தின்றது. விவசாய அமைச்சர் தேனைக் குடித்துவிட்டார். அது தேனல்ல. மரணமுற்ற பருத்தி விவசாயிகளின் ரத்தமே. கீழே விழுந்துவிட்ட சில தேன் கூடுகளில் குற்றுயிரும் கொலை உயிருமாயுள்ள சில தேன் குஞ்சுகளைச் சில இயற்கை விவசாயிகள் காப்பாற்றியதால் "தேசி' விதைகள் சற்று மிஞ்சியுள்ளன. பறந்துவிட்ட தேனீக்களை, மீண்டும் ஒற்றுமைப்படுத்த அனைத்துலகிலும் இயற்கைப் பருத்திக்குத் தேவை பெருகி வருவதால் இயற்கைப் பருத்தி விவசாய அமைப்புகள் முயலுகின்றன. ஏனெனில் பிணம் தின்னும் பி.டி. பருத்திக்கு மாற்று வாழ்வுதரும் "தேசி' விதைகள் என்பது நிரூபணம். ஒருபக்கம் பி.டி. பருத்தி விதைக்கு அரசு ஆதரவு தருகிறது. மறுபக்கம் இயற்கை விவசாயிகள் அமைப்புகள் தங்கள் சொந்த முயற்சியால் ஏற்றுமதி நோக்கில் இயற்கைப் பருத்தி சாகுபடிக்குரிய "தேசி' விதைகளுக்கு ஆதரவு தருகின்றன. "தேசி' பருத்திக்கு அரசு ஆதரவு இல்லை.
 உலக இயற்கை விவசாயப் பருத்தி உற்பத்தி 2009-10-இல் 2,41,697 டன்கள். இதில் 70 சதவீதம் இந்தியப் பங்களிப்பு. மீதி துருக்கியின் வழங்கல். சீனாவில் இயற்கைப் பருத்தி சுத்தமாக இல்லை.
 1990-களில் இயற்கைப் பருத்தி விவசாயம் செய்த விதர்பா விவசாயிகளில் பாஸ்கர் சாவே, ஆனந்தராவ் சுபேதார் ராய்சாஹேப் தகாட்கர், குஜராத்தில் காந்திலால் படேல், தாரா மித்ரா, சேத்னா விகாஸ் பங்கேற்பால் 1995-இல் விதர்பா இயற்கைப் பருத்தி விவசாயக் கூட்டுறவு அமைப்பு ஏற்றுமதியில் களமிறங்கியது.
 ஆந்திரத்தில் எம்.எஸ். சாரி என்று ஏராளமான பெயர்களின் பங்கேற்புகள் குறைவானது அல்ல. எனினும் மத்தியப் பிரதேசத்தில் கடந்த நூற்றாண்டில் ஹாவார்ட் தொடங்கிய மையப் பருத்திக் குழுவின் வளர்ச்சி காரணமாக, 1.33 லட்சம் ஏக்கரில் இயற்கைப் பருத்தி சாகுபடி தொடர்கிறது. சுமார் 60,000 டன் உற்பத்தி. 85,106 இயற்கை விவசாயிகள் மத்தியப் பிரதேசத்தில் உள்ளனராம்.
 இரண்டாவதாக விதர்பா அடங்கும் மகாராஷ்டிரத்தில் சுமார் 45,000, ஒடிசாவில் 30,000, ராஜஸ்தானில் 8,000, ஆந்திரத்தில் 12,000 இயற்கை விவசாயிகள் உள்ளனர்.
 இந்தியாவிலிருந்து இயற்கைப் பருத்தி ஏற்றுமதியிலும், உள்நாட்டு வணிகத் தேவைக்கும் பருத்தி வழங்குகின்றனர்.
   மத்தியப் பிரதேசத்தில் "தேசி' பருத்தி சாகுபடி செய்யும் திலோக் சாந்த் பூரியா என்ற விவசாயி, "தேசி' பருத்தி மானாவாரியில்கூட இருமுறை பூக்கும் என்றும் இரண்டு அறுவடை செய்யலாம் என்றும் பி.டி. பருத்தி ஒருமுறைதான் பூக்கும். ஒரு அறுவடைதான் செய்யலாம் என்பதுடன், தனக்கு "தேசி' பருத்தியே லாபமாயுள்ளது என்கிறார். விதர்பா விவசாயிகளுக்கு "தேசி' விதைகளின் வழங்கல் போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மெல்ல மெல்ல எதிர்காலத்தில், பிணம் தின்னும் பி.டி. விதைகள் அழிந்து வாழ்வு தரும் "தேசி' விதைகள் பன்மடங்கு பெருக வாழ்த்துவோம். வாழ்க பாரதம்.
கட்டுரையாளர்: இயற்கை விஞ்ஞானி.- ஆர்.எஸ். நாராயணன்
First Published in தினமணி on 26 March 2013 

நன்றி:தினமணி

Sunday, March 24, 2013

சித்த மருத்துவத்தில் பசு நெய்யின் பங்கு!


பசு நெய் ஒரு தெய்வப் பிரசாதம்.


மகரிஷி தன்வந்திரியின் ஆயுர் வேதாவின் கூற்றுப்படி, சுத்தமான பசுநெய் வாழ்வின் புத்துணர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும், நீண்ட ஆயுளுக்கும் ஒரு இரசாயனமாகக் கருதப்படுகிறது.

நல்ல கொழுப்புச்சத்து ஆரோக்கியமான சருமம், நரம்புகள் மற்றும் உயிர் அணுக்களுக்கு மிகவும் தேவை. நம் ஆரோக்கியத்துக்காக எடுக்கப்படும் எந்த முயற்சியும், நமது உடலுக்குத் தேவையான, நன்மை பயக்கக் கூடிய கொழுப்புகளைத் தவிர்ப்பதற்காக அமைந்து விடக் கூடாது. அது நமக்கு நாமே தீங்கு விளைவிக்கும் முயற்சியாக அமையும்.

சரியான அளவு பசு நெய் உட்கொள்வதின் மூலம் வாத, கப நோய்களிலிருந்து நம்மை நாம் காப்பது மட்டுமில்லாமல் மனத்தையும், உடலையும் ஒருமைப்படுத்தும் ‘ஓஜஸ்’ சக்தியையும் பெற லாம்.

பசி உண்டாக:

பிரண்டையை பசு நெய் விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வர நல்ல பசி உண்டாகும். மூல நோய் குணமாகும். உடலும் வலிமை பெறும்.

வாய்ப்புண் குணமாக:

மாசிக்காயை நன்றாகத் தூள் செய்து ஒரு வேளைக்கு இரண்டு சிட்டிகை வீதம் நெய் அல்லது வெண்ணெயுடன் சேர்த்து காலை மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர புண் குணமாகும்.

குழந்தைகளுக்கு மாந்தம்:

கறிவேப்பிலை, மிளகு சேர்த்து பசும் நெய்யில் வறுத்து சுடுநீர் ஊற்றி அரைத்து குழந்தைகளுக்கு குளிப்பாட்டியவுடன் கொடுத்து வர மாந்தம் குறையும். பசி எடுக்கும்.

வயிற்று வலி நீங்க:

வெந்தயத்தை பசு நெய்யில் வறுத்துப் பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.


இரத்த மூலம் குணமாக:

பசும்பால் 400 மில்லி, பசு நெய் 50 மில்லி, வெங்காயச் சாறு 100 மில்லி, அதி மதுரப் பொடி 20 கிராம், அடுப்பில் வைத்துக் காய்ச்சி நல்ல பதத்தில் இறக்கி ஆற வைக்கவும். இதனை நாள்தோறும் ஒருவேளை 1 கரண்டி வீதம் 10 தினங்கள் சாப்பிடவும். நல்ல குணம் தெரியும்.

பிள்ளைகள் சுறுசுறுப்பாக:

ஓமம், வசம்பு, இந்துப்பு, அதிமதுரம், சீரகம், திப்பிலி, சுக்கு இவற்றை சம அளவு எடுத்து தூள் செய்து வைத்துக் கொண்டு 1/4 கரண்டி பவுடரை பசு நெய்யில் கலந்து தினசரி காலையில் சாப்பிட்டு வந்தால் மக்குப் பிள்ளைகளும் கெட்டிக்காரப் பிள்ளையாக மாறி விடுவார்கள்.

இரத்தப் போக்கு நிற்க:

பசு நெய்யுடன், செம்பருத்திப் பூவைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வர இரத்தப் போக்கு உடனே நிற்கும்.

நரம்புத்தளர்ச்சி குணமாக:

பசு நெய்யில் வெள்ளை வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

அலுப்பு நீங்க:

மிளகை பசு நெய்யில் வறுத்து, தூள் செய்து வெல்லம் பசுநெய் சேர்த்து லேகியம் போல் கிளறி 5 கிராம் அளவு சாப்பிட்டு வர அலுப்பு தீரும்.

மூலம் குணமாக:

மாதுளம் பழச்சாறுடன் 1 பங்கு பசு நெய் சேர்த்துக் காய்ச்சி தைலம் போன்ற நிலை வந்ததும் இறக்கி பத்திரப்படுத்தி அதனை 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர கடுமையான மூல நோய் குணமாகும்.

மார்புச் சளி நீங்க:

ஏலப்பொடியைப் பசு நெய்யில் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட, மார்புச்சளி குணமாகும்.

‘நெய்’ என்பது அன்ன சுக்தி என்று வேதங்களில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது உணவைப் புனிதப்படுத்தும் பொருள் என்பதாகும். இதனால்தான் உணவில் இதை முக்கியமானதாக உபயோகிக்கிறோம்.

வளரும் குழந்தைகள் மற்றும் சைவ உணவு உண்பவர்களுக்கு இது ஓர் அவசியமான உணவாகிறது. இது முற்றிலும் கொழுப்புப் பொருள் என்பதால், இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் முடிந்த மட்டும் இதைத் தவிர்த்து விடுதல் நன்மை பயக்கும்.

மணமிக்க நெய்ச்சோறு என்றாலே குழந்தைகள் பொதுவாக மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள். இன்றைய காலகட்டத்தில் இனிப்புப் பண்டங்கள் முழுக்க முழுக்க தனி நெய்யினால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அதன் ருசியே அலாதியானதுதான். இருப்பினும், அலாதியான ருசி என்பதால் அளவுக் கதிகமாக உண்டு விடாதீர்கள். பிறகு அது மருத்துவருக்கு இலாபமாகி விடும்.

Saturday, March 23, 2013

ஐஸ்வர்யங்கள் தரும் கோமாதா


பசுமாடு எங்கெல்லாம் நன்றாக பராமரிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் லஷ்மி கடாக்ஷம் இருக்கும். அதனால்தான் தெய்வசக்தி நிறைந்த கோயில்களில் கூட பசுமாடுகளை வளர்த்து அதற்கு முறையாக ’கோ பூஜை’ செய்யும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள்.  எப்பேர்பட்ட தோஷத்தையும் போக்கும்  ஆற்றல் பசுவுக்கு இருக்கிறது. 

மகாபாரதத்தில் பிஞ்சு குழந்தையான கண்ணனை கொல்ல கம்ஸன், பல முயற்சிகளை மேற்கொண்டான். அதில் ஒரு முயற்சியாக அரக்கி ஒருத்தியை அனுப்பினான். அந்த அரக்கி, அழகான பெண் வடிவம் எடுத்துக் கொண்டு யசோதையின் வீட்டிற்கு வந்தாள். அங்கே குழந்தை கிருஷ்ணன் தூங்கிகொண்டு இருந்தான். கண்ணனின் மேல் பாசம் கொண்டவள் போல நடித்து, குழந்தைக்கு தாய்பால் கொடுத்தாள்.
அவளின் நோக்கம் பாசம் அல்ல. அது கொடுமையான திட்டம். அது என்னவென்றால், அரக்கியின் தாய்பாலை குழந்தை குடித்தால், அவள் உள்ளத்தில் இருக்கும் விஷம், அவள் உடல் முழுவதும் இருந்த காரணத்தால், தாய்பாலின் மூலமாக அவ்விஷங்கள் குழந்தையான கண்ணனின் ரத்தத்தில் பரவி, கண்ணனி்ன் இரத்தத்தை அட்டைபூச்சியை போல உறிஞ்சி எடுத்துவிடும் என்று நினைத்தாள் அந்த அரக்கி.
நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும் என்பார்கள். ஆனால் அந்த அரக்கியோ ஒரு தெய்வத்தையே மடியில் வைத்துக்கொண்டு கொடுமை செய்ய நினைத்தாள். தெய்வ குழந்தையான கண்ணனும் அவள் உயிரை எடுக்க வேண்டும் என்றுதான் நினைத்தான். அவளாக வந்து மாட்டினாள். பாலுடன் அரக்கியின் உயிரையும் உறிஞ்சினான் கண்ணன். செத்து தொலைந்தாள்.
அவள் உயிர் பிரிந்த போது பெரும் அலறலுடன் பூமியில் விழுந்தாள். மிக பயங்கரமான அந்த குரலை கேட்ட ஊர் மக்களும், தாய் யசோதையும் ஒடிவந்து பார்த்தபோது, அரக்கி ஒருத்தி மாமிச மலை போல் இறந்து கிடப்பதை பார்த்தார்கள். என்ன நடந்தது என்பதையும் புரிந்துக் கொண்டார்கள். ஒரு கொடூரமான அரக்கியை தன் குழந்தை கண்ணன் வீழ்த்தினான் என்ற மகிழ்ச்சி இருந்தாலும், ஒரு உயிரை கொன்ற பாவம் பிரம்மஹத்தி தோஷமாக கண்ணனை பிடித்துக்கொள்ளக் கூடாதே என்று அஞ்சினாள் தாய் யசோதை.
உடனே அதற்கான தோஷ நிவர்த்திக்காக பசுவின் வாலில் கண்ணனை சுற்றி, அவன் தலையில் கோமியத்தை தெளித்து தோஷத்தை போக்கினாள் யசோதை. இது, ஸ்ரீவி்ஷ்ணு புராணத்தில் இருக்கிற தகவல்.
ஆகவே, இறைவனாக இருந்தாலும்  இறைவனுக்கே தோஷம் பிடிக்காமல் இருக்க சிறந்த பரிகாரம் பசுதான் என்கிறது சாஸ்திரங்களும் – புராணங்களும்.

பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்கள் நிறைந்திருக்கிறார்கள்

பூமாதேவியே கோமாதாவாக அவதாரம் எடுத்தாள் என்கிறது புராணம். தேவர்களும் – அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து தோன்றியது பசு. கோமாதா என்று போற்றப்படும் அந்த பசுவின் உடலில் தேவர்களும், முனிவர்களும், இறைவனும், இறைவியும் இடம் பெற வேண்டும் என்று விரும்பினார்கள்.
அதனால் முனிவர்கள், தேவர்கள், இறைவனும் பசுவின் உடலில் குடி வந்தார்கள். அப்படியே முப்பத்து முக்கோடி தேவர்கள்களும்பசுவின் உடலில் குடிவந்து விட்டார்கள்.
கடைசியாக வந்த கங்கையும் – லஷ்மியும், தங்களுக்கு இடம் இல்லாததால் வருந்தினார்கள். இதை கண்ட கோமாதா, “அகில உலகத்தையே பூமாதேவியாக இருந்து சுமக்கும் நான், உங்களை சுமக்க மாட்டேனா?” என்று கூறி தன் பின் பகுதியில் இடம் தந்தாள். இதனால் பின்பாகத்தில் கங்கையும், ஸ்ரீலஷ்மி தேவியும் அமர்ந்ததால், பசுவின் சாணத்தில் ஸ்ரீலஷ்மியும், கோமியத்தில் கங்கையும் இருப்பதாக ஜதீகம்.

தோஷத்தை போக்கும் கோமாதா

கோயிலுக்கு நல்லவர்கள் – கெட்டவர்கள் என்று பல பேர் வருவதால் அவர்களுடைய தோஷம் அந்த கோயிலுக்குள் நிலைத்துவிடாமல் இருக்க அந்த காலத்திலிருந்து இந்த காலம்வரையிலும் சில கோயில்களில், காலையில் பசுவுக்கு கோபூஜை செய்வதுடன், அந்த கோயிலை சுற்றி அந்த பசுவை வலம் வர வைப்பார்கள்.
கங்கை எப்படி புனிதம் வாய்ந்ததோ அதுபோல், எண்ணற்ற மடங்கு புனிதம் வாய்ந்தது பசுவின் சாணம். பசு சாணத்தை கரைத்து வீட்டின் வாசலில் தெளித்தால் கிருமி நாசினியாகும். பசுவின் சாணத்தால் தயாரிக்கப்படும் திருநீறின் மகிமை அற்புதமானது. திருநீறை தினமும் நெற்றியில் வைத்து வந்தால் கண் திருஷ்டி பாதிப்பு, விரோதிகளால் எற்படும் தொல்லை, நோய்கள் போன்றவை நீங்கும். துஷ்டசக்திகளும் அண்டாது.
கோமியத்தை வீட்டிற்குள் தேளித்தால், வீட்டில் இருக்கும் தோஷங்கள் விலகியோடும். கங்கையின் அருளாசி கிடைக்கும். ஸ்ரீமகாலஷ்மி வாசம் செய்வாள்.

கோ பூஜை

வருடத்திற்கு ஒருமுறையாவது நம் வீட்டிற்கு பசுவை அழைத்து வந்து, அதற்கு மஞ்சள் – குங்குமம் வைத்து, மலர்களால் அலங்காரம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து, அந்த பசுமாடு வயிறு நிறைய சாப்பிட பழங்கள், அகத்திகீரை போன்றவற்றைகொடுத்து, நெய் விளக்கு ஏற்றி, தீபஆராதனை செய்ய வேண்டும். பிறகு நெய் விளக்கை கையில் எடுத்து அந்த பசுவை சுற்றி மூன்று முறை வலம் வர வேண்டும். இப்படி வருடத்திற்கு ஒருமுறையாவது கோபூஜை செய்து வந்தால், நம் இஷ்ட தெய்வ – குல தெய்வ அருளாசியும் கிடைத்து, தலைமுறை தலைமுறைக்கு சுபிக்ஷம் பெருகும்.

யாகம் -  ஹோமம்

வீட்டில் யாகம் – ஹோமம் போன்ற தெய்வ வழிபாடுகளை செய்யும் போது, யாகத்தில் (அ) ஹோமத்தில் பசு வரட்டியை போட்டால் இன்னும் அந்த யாகத்திற்கும் ஹோமத்திற்கும் சக்தி கூடும். அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.  யாகம் – ஹோமம் போன்றவை நிறைவு பெற்றதும் அந்த சாம்பலை ஒரு வெள்ளை துணியில் கட்டி வீட்டின் தலைவாசலில் மாட்டினால் அந்த வீட்டுக்குள் எந்த தோஷமும் நுழையாது. ஸ்ரீலஷ்மி கடாக்ஷம் கிடைக்கும்.
இப்படி எண்ணற்ற சக்தி வாய்ந்த பசுவை வணங்கி, முப்பத்து முக்கோடி தேவர்களின்ஆசியை பரிபூரணமாக பெற்று, தலைமுறை தலைமுறைக்கும் வளமோடும் – நலமோடும் வாழ்வாங்கு வாழ்வோம். ’கோமாதா நம் குலத்தை காக்கும் குலமாதா’. ஆகவே கோமாதாவான பசுக்களை நன்றாக பராமரித்து – பாதுகாத்து வணங்கினால் நிச்சயம் அனைவருக்கும் சுபிக்ஷத்தை அள்ளி அள்ளி தருவாள் கோமாதா.!
நன்றி:  நிரஞ்சனா

ஷீரடி சாய்பாபாவின் அருளாசி (week 12/2013)



Posted: 17 Mar 2013 03:00 PM PDT
நடக்கப் போவதை தடுக்க முடியாதென்றால்,பாபாவிடம் போவதால் பிரயோஜனம் என்ன?தலையெழுத்துப்படி நடப்பது நடந்தே தீரும் என்றால் சாய்பாபா என்று ஒருவரை எதற்காக வைத்துக்கொள்ளவேண்டும்?சீரடிக்கு போவதால் என்ன லாபம்?கர்மவினையை பாபாவால் என்ன செய்துவிட முடியும்?

சாய்பாபாவின் பதில்;"உனது கர்மத்தின் பலனை நீ அனுபவித்தாக வேண்டும்.ஆனால் உனக்கு என் மீது நம்பிக்கை இருந்தால்,எனது ஸாந்நித்யத்தின் முன்னர் நெருப்பில் வைக்கோல் எரிவதை போன்று உனது கர்மவினைகள் எரிக்கப்படும்".
சர்வாந்தர்யாமி
Posted: 18 Mar 2013 03:00 PM PDT
 பாபாவின் சொற்கள் பிரமாணம் நிறைந்தவை.வரண்ட பாறையில் தண்ணீர் உள்ளது என அவர் கூறும்போது,அங்கே தண்ணீர் கிட்டியது.பஞ்ச பூதங்களும் அவரது ஆணைக்கு கட்டுப்பட்டன.நெருப்பு,நீர்,காற்று ஆகியவை அவருடைய ஆணைக்கு கீழ்ப்படிந்தது.பலத்த காற்றும் மழையும் அவருடைய ஆணையை மதித்து நின்றன.கொளுத்தும் வெய்யில் காலத்தில் எரியும் நெருப்பின் அருகே குளுமையான காற்று வீச வேண்டுமென பாபா சங்கல்ப்பம் செய்ய,அவ்வாறே குளிர் காற்று வீசியது.மாண்டவர் மீண்டும் உயிர்பெற்றனர்.தம் முன் இருப்பினும் இல்லாவிடினும் ஒருவனது இதயத்தில் உள்ளதை அறியும் சக்தியும்.அதை சீர்படுத்தும் சக்தியும் அவரிடம் இருந்தது.அவர் சர்வாந்தர்யாமி என உணரப்பட்டார்.
Posted: 19 Mar 2013 03:00 PM PDT
 பாபா ஒரு சாதாரண வித்தைக்காரர் அல்ல,அவர் ஒரு சமர்த்த சத்குரு.பக்தர்களின் உள்ளங்களில் விசுவாசமும் நம்பிக்கையும் நிரம்பி வழிய பாபா சில அற்புதங்களையோ ,வியக்கத்தகும் உத்திகளையோ கையாளுகிறார்.நன்றி உணர்ச்சி,பிரேமை,பக்தியாக மாறுகிறது.தங்கள் தேவைகள் யாவற்றையும் அளிக்கக் கூடிய வள்ளல் என்ற நோக்கத்துடன் மக்கள் பாபாவை அணுகுகின்றனர்.அவர்களது லௌகீக தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவே பாபாவிடம் செல்கின்றனர்.அனால் பின்னர் பலர் பாபா ராமன்,சிவன் போலவே தங்கள் இஷ்ட தெய்வம் என்றும்,தங்கள் முன்னோர்களின் குல தெய்வமே பாபாவாக புதிய உருவில் தோன்றி வையகத்தில் புராதன தெய்வீக பணிகளை நிறைவேற்றுகிறது எனவும் கண்டு கொண்டுவிடுகின்றனர்.
Posted: 20 Mar 2013 03:00 PM PDT
போதிப்பவர் குரு,போதித்து கடவுளிடம் இட்டுச் செல்பவர் சத்குரு,தங்களது சித்திகளையும் உயர்ந்த சக்திகளையும் பயன்படுத்தி பகவானிடத்தில் எல்லோரையும் வரவழைப்பவர் சமர்த்த சத்குரு.ஒரு குருவை மற்றொரு குருவுடன் ஒப்பிட்டு பார்க்கக் கூடாது.ஒப்பிட்டுப் பார்த்தால் அனேகமாக மனக்கசப்பை அளிக்கும்.பக்தனுடைய நலனுக்கும் அது ஒவ்வாது.பாபாவின் குணங்கள் அற்புதங்கள் பற்றி கேட்டறிந்தோ,தங்களுடைய சொந்த அனுபவங்கள் அல்லது பிறருடைய அனுபவங்கள் வாயிலாக புரிந்து கொண்டோ ஒருவர் பாபாவினால் வசீகரிக்கப்பட்டால்,அவர் உடனடியாக பாபாவுடன் மேலும் தொடர்பு கொண்டு அதன் மூலம் பயனடைய வேண்டும்.
பாபாவை எந்த வகையில் சேர்ப்பது,அதாவது அவர் அவதார புருஷரா,அவலீயாவா,தேவாத்மாவா,இந்துவா,முஸ்லீமா என்பது போன்ற சர்ச்சைகளில் ஈடுபடவேண்டிய அவசியமில்லை.உண்மையான பக்தன் இந்தமாதிரி விஷயங்களில் கவனம் செலுத்தமாட்டான்.

ஸ்ரீ சச்சிதானந்த சமர்த்த சத்குரு சாயிநாத மஹராஜருக்கு ஜெயம் உண்டாகட்டும்"http://feeds.feedburner.com/~r/ShirdiSaiBabaSayings-Tamil/~4/xbVr0QdSISo?utm_source=feedburner&utm_medium=emailசர்வ சக்தி மூர்த்தயே நம
Posted: 21 Mar 2013 03:00 PM PDT
பாபாவை அணுகும் போது ஒருவன் என்ன பலன்களை எதிர்ப்பார்க்கிறான்?லௌகீகமானவையா,ஆன்மீகமானவையா?எதுவாயிருப்பினும் பாபாவால் அளிக்க முடியாத பலன் ஏதுமில்லை,"சர்வ சக்தி மூர்த்தயே நம" (எல்லா சக்திகளும் கொண்ட பெருந்தகையே போற்றி)என்பது போன்ற நாமாக்களால் தினமும் பக்தர்களால் துதிக்கப்படுகிறார்.எந்த விதமான பலன்கலானாலும் சரி,நோய் தீர்ப்பதோ(உடல் ரீதியானதாயினும் மனரீதியானதாயினும் சரி)மனப்பிராந்திகள்,ஊனங்கள் இவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இல்லங்களில் நிலவி வரும் துன்பங்களுக்கும் நிவாரணம் அளிப்பது போன்ற எந்த விதமான பலனாயினும்,பாபாவால் அளிக்க முடியும் என்பது பல பக்தர்களின் அனுபவங்கள் 
http://feeds.feedburner.com/~r/ShirdiSaiBabaSayings-Tamil/~4/by439NfFL0E?utm_source=feedburner&utm_medium=email
Posted: 22 Mar 2013 03:00 PM PDT
பாபாவுக்கு பிரியமான ஒரு பையன் இருந்தான். அவனது  பெயர் பாபு, அவனது முதல் ஆண்டு பிறந்த நாள் விழா மாதவ ராவ் தேஷ்பாண்டே வீட்டில் சிறப்பாக நடந்தது. இந்த விழாவுக்கு பாலா சாகேப் பாடே அழைக்கப்பட்டிருந்தார். அவர் வர இயலாமையைத் தெரிவித்துவிட்டு, பாபாவை பார்க்கச்சென்றிருந்தார்.

பாபா - "ப்ரதான் அளிக்கும் விருந்தில் சாப்பிட்டாயா"?
பாலா சாகேப்  - "இன்று வியாழக் கிழமை நான் சாப்பிடவில்லை"
பாபா - "இருந்தால் என்ன?"
பாலா சாகேப் - "குரு வாரங்களில் (நாட்களில்) நான் வெளியே சாப்பிடுவதில்லை. அது என் நியமம்!"
பாபா - "யாரை திருப்திப்படுத்த இந்த விதி?"
பாலா சாகேப் - "தங்களைத் திருப்திப்படுத்தவே!"
பாபா - "அப்படியானால் நான் சொல்கிறேன், பாவ் அளிக்கும் விருந்தில் சாப்பிடு"
பாபா - "விரதம் என்ற பெயரில் உன் உடல் நலனை கெடுத்துக் கொள்ளும் விதத்தில் பட்டினி கிடப்பது, சத்தற்ற உணவு உண்ணாமல் இருப்பது, வீட்டு விலக்கம் என காரணம் காட்டி ஒதுங்கியிருப்பது போன்றவை செய்யாதே!"   
Posted: 23 Mar 2013 03:00 PM PDT
என் பக்தனின் பெயரை உச்சரிப்பதே எனக்கு தியானம்.என் பக்தனோடு நடப்பதே எனக்கு ஆனந்தம்.என் பக்தனுடைய துன்ப வேளைகளில் இன்பத்தைக் கொண்டு வருவதே எனக்குக் கிடைக்கின்ற திருப்தி.என் பக்தன் தவறி விழும் நிலை ஏற்படும்போது எனது கரங்களை நீட்டுகிறேன்.ஒன்று இரண்டாக அல்ல நான்கு நான்காக நாலு மடங்குகளாக நீட்டி தாங்கிப் பிடிக்கிறேன்.அவன் ஒருபோதும் விழுந்து விட அனுமதிக்கவே மாட்டேன்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.