Monday, January 21, 2013

பூலோகத்தில் பசுக்கள்

காமதேனு என்கிற தெய்வ பசு பால்கடலில் இருந்து தோன்றியது. இதனால் அதன் சந்ததிகளே பூலோகத்தில் பசுக்களாக இருக்கின்றன என்று பதிணென் புராணங்கள் கூறுகின்றன. 

கோதானச் சிறப்பு: நாம் கொடுக்கும் தானங்களில்  கல்வி தானம், கன்யா தானம் (திருமணம் செய்வித்தல்) காசு தானம், தான்ய தானம், கோதானம், தில தானம், பூமி தானம், அன்னதானம் ஆகியன சிறந்தது. கோதானம்- வாழும்காலத்திலும் வாழ்ந்து முடிந்த பிறகு மறுபிறப்பிலும் புண்ணியம் தருகிறது. 

காரணம், ஒரு மனிதன் வாழும்போது அவனுக்கு கோதானம் கொடுத்தால் இறை வடிவங்கள் அனைத்தும் அவனை வாழ வைக்கிறது. அந்த புண்ணியம் தானம் கொடுத் தவருக்கும் சேர்ந்து குலம் காப்பதாக தர்ம சாஸ்திரம் சொல்கிறது. 

பசுமடியிலும் வழிபாடு செய்யலாம்: பசுவின் மடியில் உள்ள நான்கு காம்புகளுக்கும் தனித்தனி பெயர்கள் உண்டு. அவை தான் சுவாஹா காரம், சுவதா காரம், வஷ்டா காரம், ஹந்தா காரம். இந்த நான்கு பெயர் பொண்ட காம்புகளையும் தேவர்கள், சித்தர்கள், காவல் தெய்வ மூர்த்தங்கள் தினப்படி பூஜை செய்கின்றனர். 

நாமும் தினசரி பசு மடியின் காம்பை வழிபட்டு வந்தால் நம்மைப் பிடிக்கின்ற சகல பாவங்கள், தோஷங்கள், நோய்கள் விலகும் என வேதவாக்யங்கள் கூறுகின்றன. பசுவை சுபமுகூர்த்த நாளில் பூஜை செய்து கன்றுடன் பயன்படுத்துவோருக்கு தானம் செய்பவன் திஷகடன், தேவகடன் பித்ரு கடன் என்னும் மூன்று கடன்களிலிருந்து விடுபடுகிறான்.

 பசுவுக்கு புல் கொடுத்து அதை தடவிக்கொடுத்து அன்பை தெரிவிப்பதை 17-வது சாஸ்திரக் கடமையாக வேதம் கூறுகிறது. நோய் தீர சனிக்கிழமை பசு நெய்யை தானம் செய்யலாம். 

வைதரணி கோதானம்: ஒரு வீட்டில் இறந்தவர் மோட்சமடைய பல தானங்கள் செய்வர். பித்ரு ஆனவர் வைதரணி என்ற ஆபத்தான நதியைக் கடந்து தான் சொர்க்கம் போக வேண்டும். இறந்த 12-ம் நாள் கோதானம் செய்தால் அதில் ஏறி ஆபத்து இன்றி மூதாதையர்கள் சொர்க்கம் செல்வதாக ஐதீகம். அதற்கு முதல்நாள் மாட்டுத் தொழுவத்தில் ஹோமம் செய்வதால் பித்ரு ஆசி கிடைக்கும். 

பிரம்மாண்ட புராணத்தில் பசுக்கள்.... கேது மால வர்ஷ் என்ற கைலாயத்தின் மேற்கு பகுதியில் வலிமையும் அழகும் மிக்க பெண்மணிகள் உள்ளனர். இங்கே பலாப்பழங்களும் பசுக்களும் நிறைந்து மக்கள் மகிழ்ச்சியாக வாழும் இடமாக உள்ளது. கோமாதாவை கிரகப்பிர வேசத்திற்கு முன் சுபநாளில் பூஜை செய்து கைலாய பர்வத பெயர்களை வீட்டுக்கு வைத்து இன்பமாக வாழத் தொடங்கலாம். அதன் தன்மைகள் இங்கே சொல்லப்பட்டுள்ளன. 
அவை:- பத்ராட்ச வர்ஷ்:
அழகிய மலைகள் நதிகளை உடையது. கிழக்கில் உள்ளது. கிம்புருஷ் வர்ஷ்: பொன்மேனி கொண்ட ஆண்கள், அப்சரசுகள் இயற்கை வளங்கள் பொருந்தியது. 

ஹரி வர்ஷ்: வெள்ளி போல் ஒளிரும் மக்கள் உள்ள இடம் முதுமை என்பதே அறியாத மேனியர். கருப்பஞ்சாறு அருந்தி நெடுநாட்கள் வாழ்வர். 

இளவிருத வர்ஷ்: உயர்ந்த மலை போன்று உள்ளது. இங்கு சூரிய வெப்பம் கடுமையாக இருக்காது. இங்கு வாழ்பவர்களும் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்வர். 

ரம்யகவர்ஷ்: ஒரு ஆலமரம் இருக்க அழகுடைய மனிதர்கள். இதன் சாறை உட்கொண்டு பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்கின்றனர். 

ஹிரண்வன வர்ஷ: இரண்யபதி என்ற ஆறு ஓடிக்கொண்டிருக்க இங்குள்ளவர்கள் செல்வந்தர்களாகப் பல்லாயிரம் ஆண்டுகள் உயிர்வாழ்வர். 

குரு வர்ஷ்: மரவுரி தரித்தவர்கள் வாழ்ந்திட ரத்தினங்கள் கொட்டிக்கின்றன. இரட்டைக் குழந்தைகளே பிறக்கின்றனர். பல்லாயிரம் ஆண்டுகள் வாழ் பவர்களாக உள்ளனர். கயிலாய மலையில் வாழும் பசுக்கள் இங்கெல்லாம் சென்று வருவதால் நன்மையும் வளங்களுமே சேர்கின்றன என பிரம்மாண்ட புராணம் சொல்கிறது. 

லிங்க புராணத்தில் கோதானம்...... 

ஆயிரம், ஐநூறு, இருநூற்றிஐம்பது, நூற்று ஒன்று என சக்திக்கு ஏற்றவாறு பொன்னால் அமைத்த பசு கன்றை கொம்பில் பத்மராகம், குளம்புகளில் வைரங்கள், புருவநடுவில் முத்து, காலில் வைடுரியம், பற்களில் புஷ்பநாகம் பதித்து ஒரு மண்டபத்தில் வைத்து ஆடை அணிகலன்களால் அலங்கரித்து தூபம் தூய தீபநிவேதன, ஆரத்திகள் செய்து வேத நெறிதவறாத அந்தணர்க்கு முப்பது கழஞ்சு பொன்னுடன் தட்சிணையோடு தானம் சானித்ததால் அரச பதவியைக் பெற்றனர் என்ற தகவல் உள்ளது. இதேபோன்று பத்து கழஞ்சு பொன் வைத்து ஆயிரம் பேருக்கு தானங்கள் அளித்தனர். இதற்கு சிவப்நீதி தானம் என்று சொல்லப்பட்டுள்ளது. 

கோ-விந்த நாமம்...... 

யமுனா நதிக்கரைக்கு 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மதுராநகர் அருகே பிருந்தாவனம் என்ற துளசி வனம் உள்ளது. இங்கே தான் கிருஷ்ணபகவான் பாலகனாக புல்லாங்குழல் இசைத்து ஆயர்பாடிச் சிறுவர்களோடு விளையாடிய போது பசுக்கூட்டங்கள் குழலோசையில் மயங்கி நின்றன கோவாகிய பசுவை கிருஷ்ணர் தன் கானத்தால் ஈர்த்ததால் அவருக்கு கோவிந்தன் என்ற பெயர் ஏற்பட்டது. 

கோமுக நீர் மகிமை...... 

லட்சக்கணக்கான பக்தர்கள் கங்கையில் தினமும் புனித நீராடி தங்கள் பாவங்களை போக்கிக் கொள்கின்றனர். ஆனால் அந்த பாவங்களை ஏற்றுள்ள கங்கையோ, ஆலயங்களில் உள்ள கோமுக நீரைத் தன் தலையில் தெளித்துக்கொண்டு புனிதம் அடைகிறாள். இறைத் திருமேனியை உரசியப்படி வெளியேறும் நீர் ஒப்பற்ற சக்தி கொண்டதாக திகழ்கிறது. 

சிவ வைணவ ஆலயங்களில் மூலஸ்தான சுவாமிகளுக்கு திருமஞ்சன நீர் வெளியேறும் வாய்ப்பகுதிக்கு ஏன் கோமுகம் என்று வைத்தனர் என்றால் கோ என்கிற பசுவின் உடம்பும் கருவறை போல இறை ஆற்றல் கொண்டதாக கருதப்படுகிறது. எனவே கருவறை மஞ்சன நீர் பசுவில் இருந்து பெறப்படுவது போல பாவிக்கப்படுகிறது.

கோவிலுக்கு செல்பவர்கள் கோமுகம் வழியாக வரும் அபிஷேக நீரைப் பருகுவதால் திருஷ்டி, தோஷம் பில்லி, சூனியம், ஏவல், துர்வினைகள் நீங்கப்பெற்று நோய்கள் நீங்கி குணம் பெறுவர். சர்வ மங்களங்களும் உண்டாகும்.
நன்றி: மாலை மலர்
Source http://www.maalaimalar.com/2013/01/16144014/gomatha-in-world.html

No comments:

Post a Comment