Wednesday, January 23, 2013

பால் தீர்த்தங்கள்


உலக வாழ்வில் பால் முக்கியமான பொருள். மானுடம் தாயின் பாலாலேயே வளர்கின்றது.
உலக வாழ்வில் பால் முக்கியமான பொருள். மானுடம் தாயின் பாலாலேயே வளர்கின்றது. தாய்ப்பால் அதற்கு முதன்மை உணவுப் பொருளாகவும் கடவுளாகவும் திகழ்கிறது.
 தாய்ப்பாலுக்கு இணையான இடத்தைப் பெற்றிருப்பது பசுவின் பாலாகும். பசுவைப் பெரிய தாய் எனும் பொருளில் "கோமாதா' என்றழைக்கிறோம். தாய்ப்பால் கூட குழந்தைக்கு மட்டுமே உதவுகிறது. ஆனால் பசும்பாலோ நமது வாழ்நாளின் இறுதி வரை உபயோகமாகிறது. மனிதன் இறந்த பின்னும் அவனுடைய எலும்புகள் பாலில் நனைக்கப்படுகின்றன அல்லது சமாதியில் பாலாபிஷேகம் செய்யப்படுகிறது.
 வாழ்வியல் சடங்குகள் அனைத்திலும் பசுவின் பால் முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. பசுவின் பாலைக் கொண்டு அபிஷேகம் செய்வதால் தெய்வங்கள் மகிழ்கின்றன. பசும்பால் சிறந்த நிவேதனமாகவும் உள்ளது. கிராம தெய்வங்களுக்குப் படைக்கப்படும் பொங்கலைப் பால் பொங்கல் என்று அழைப்பதுடன் பால் பூசை எனவும் குறிக்கின்றனர்.
 பல விதங்களில் சமய வாழ்வில் முக்கியமான இடத்தைப் பெறும் பால், தீர்த்தமாகவும் விளங்குகிறது. பாற்கடல், பாற்குளம்,பாற்கிணறு, பாற்சுனை போன்ற பெயர்களால் அனேக தலங்களில் தீர்த்தங்கள் உள்ளன. இவை ஆதியில் பாலாலேயே அமைந்திருந்ததாகவும் மக்கள் நீராடி மகிழ்வதற்காக இவற்றை சிவபெருமான் நன்னீர் தீர்த்தங்களாக மாற்றிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. காமதேனு, கபிலா முதலிய தெய்வப் பசுக்கள் தம்மிடமிருந்து பெருகிய பாலால் தீர்த்தங்களை அமைத்தன என்று தல புராணங்கள் கூறுகின்றன.
 ஒரு முறை கோலோகத்திலிருந்த ஸுனந்தா, ஸுமனா, ஸுரதி, ஸுபலா, கபிலா எனும் ஐந்து தெய்வீகப் பசுக்கள் காசிக்கு வந்து சிவபெருமானை தரிசித்தன. அவரைக் கண்ட மகிழ்ச்சியால் அவற்றின் மடியிலிருந்து பால் பெருக்கெடுத்து ஓடிப் பெருங்கடல் போல் தேங்கியது.
 சிவபெருமான் அதில் நீராட அது நன்னீர் ஆனது. நீராடிய பின் அந்த தீர்த்தத்தை சிவபெருமான் ஆசீர்வதித்தார். அது கபில தீர்த்தம், விருஷப தீர்த்தம், ஷுர நதி என்று பலவாறு அழைக்கப்படுகிறது. இது போன்ற பல தலங்களில் பசுக்கள் அமைத்த தீர்த்தங்களைக் காண்கிறோம்.
 உலகிலுள்ள அனைத்து செல்வங்களுக்கும் அதிபதியான மகாலட்சுமி தேவர்களும் அசுரர்களும் கூடிய பாற்கடலைக் கடைந்து அதிலிருந்து வெளிப் பட்டாள். அவளுடன் காமதேனு (பசு), உச்சைசிரவஸ் (குதிரை), ஐராவதம் (யானை), அரம்பையர், வாருணி, மூதேவி முதலியனவும் வெளிப்பட்டன.
 சிதம்பரத்திற்கு அருகிலுள்ள திருக்கழிப் பாலையில் சுவாமி பால்வண்ணநாதர் என்னும் பெயரில் வீற்றிருக்கிறார். இங்குள்ள தீர்த்தம் வெண்மையாக உள்ளது. இதனைப் பால் தீர்த்தம் என்று அழைக்கின்றனர்.
 திருக்குருகாவூர் வெள்விடைநாத சுவாமி ஆலயத்தில் தை அமாவாசையன்று சுவாமி தீர்த்தம் கொடுக்கும்போது கிணற்று நீர் பால் போல் வெண்ணிறம் அடைகிறது என்கின்றனர்.

Thanks to Author:  - பூசை ஆட்சிலிங்கம்

Source: Dinamani.

No comments:

Post a Comment