Tuesday, January 29, 2013

மாட்டுப் பொங்கல்! சிறப்பு என்ன? ஓர் அலசல்!




yatra-3
மாட்டுப் பொங்கல், மனிதர்களின் வாழ்வுடன் ஒன்றிவிட்ட ஆவினங்களை ஆராதிக்கும் திருநாள். பசுவும் காளையும் உழவர்களின் நண்பன் என்பதோடு, அவை ஆன்மிக முக்கியத்துவமும் கொண்டவை. காளையின் உரு கொண்டவரே நந்தியம் பெருமான், அவர் ஈசனின் வாகனமாகவும் உள்ளார். அதனாலேயே சிவனை இடபக் கொடியோன் என்பார்கள். ஈசன் நந்தி மீதேறி வருவான் என்பதை ‘வெள்ளை எருதேறி’, ‘விடையேறி’ என்றெல்லாம் திருமுறைகள் கூறுகின்றன. ‘நந்தி நாமம் நமசிவாய’ என்று தேவாரமும், ‘நங்கள் நாதனாம் நந்தி’ என்றும் திருமந்திரமும் பேசுகின்றன. ஆகவே, நந்தியும் சிவமும் வெவ்வேறல்ல என்பது தெளிவாகிறது. சிவன் கோயில்களில் விழா நடக்கும்போது நந்திக் கொடியை பறக்க விடுவது வழக்கம்.
பசுவிற்குள் எல்லா தெய்வங்களும் உறைவதாக, வேதங்களும் சாஸ்திரங்களும் உறுதியாகக் கூறுகின்றன. மகாலட்சுமியின் பூரண அம்சமும் உறைவிடமும் பசுதான். பசுவின் குளம்படி தூசுகள் பாவத்தையும் சேர்த்து பறக்கடிக்கும். ‘யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை’ என்று திருமூலர் வேண்டுகோள் விடுக்கிறார். இறைவன் எடுக்கும் எல்லா அவதாரங்களும் பசுக்களோடு அன்யோன்யமும் நெருக்கமும் கொண்டிருப்பதை புராணங்கள் வாயிலாகக் காணலாம். மேலும், இன்று நாம் வணங்கும் பெரிய மற்றும் சிறிய கோயில்களில் உறையும் தெய்வங்களை ஆதிநாட்களில் பசுக்கள்தான் கண்டறிந்தன.
பசுக்களே அனுதினமும் பூஜித்து மகிழ்ந்த கோயில்களும் பசுவின் பெயராலேயே ஈசன் விளங்கும் ஆலயங்களும் நிறைய உள்ளன. அவை பசுபதீஸ்வரர், தேனுபுரீஸ்வரர் என்றெல்லாம் வழங்கப்படுகின்றன. மாட்டுப் பொங்கலன்று நாம் ஆவினங்களை தொழுவதோடு நின்றுவிடாமல், மற்ற நாட்களிலும் பசுக்கள் பூஜித்த தலங்களுக்குச் சென்று, ஐந்தறிவு ஜீவனானாலும், பக்தி மார்க்கத்தில் மானுடர்களுக்கு சளைத்தவை அல்ல என்பதை அவை நிரூபிப்பதை அறிந்து மகிழலாம். பசுவின் திருமுகமே தெய்வீகத் தன்மை வாய்ந்தது. கண்களில் சூரிய, சந்திரரும், முன் உச்சியில் சிவபெருமானும் உறைகின்றனர். கோயிலில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் புனிதநீரை பக்தர்கள் ஏந்தி உட்கொள்வதற்கும், தலையில் தெளித்துக்கொள்வதற்கும் கோமுகம் உதவுகிறது.
பசுவின் முகம் (கோ முகம்) அத்தனை பவித்ரமானது என்பதை உணர்த்துவதற்குதான் இந்த ஏற்பாடு. பெரிய வேள்விகளில் உருகிய நெய் வெளியேறும் பகுதியை பசுவின் முகத்தைப் போன்றே இருக்கும். பாரத தேசம் முழுவதுமே கோமுகி, தேனு தீர்த்தம், பசுவின் குளம்பால் உண்டான தீர்த்தம் என்று எண்ணற்ற புனித தீர்த்தங்கள் அமைந்துள்ளன. தஞ்சாவூர்-திருவையாற்றைச் சுற்றி சப்த ஸ்தானங்கள் எனப்படும் ஏழு கோயில்கள் உள்ளன. இவை யாவும் நந்தியம் பெருமானின் திருமண நிகழ்வோடு தொடர்புடையவை. நந்தியம்பெருமானுக்குத் திருமணம் நடத்தி வைக்கும் பொருட்டு திருவையாறு, திருப்பழனம், திருவேதிக்குடி, திருச்சோற்றுத்துறை, திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம், திருக்கண்டியூர் ஆகிய இந்த ஏழு ஊர்களுக்கும் ஈசனும் அம்மையும் திருவுலா வருவர்; நிறைவாக திருமழபாடியில் நந்தி திருமணத்தை நடத்தி வைப்பர்.
பார்வதி தேவியே பசு உருவில் திருவாடுதுறை ஈசனை வழிபட்டு முக்தி பெற்றதால், கோமுக்தீஸ்வரராக ஈசன் அருள்கிறார். கரூர் எனும் தலம் காமதேனுவால் பூஜிக்கப்பட்டது. அதனாலேயே பசுபதீஸ்வரர் என்றும் ஆநிலையப்பர் எனவும் இங்குள்ள இறைவன் அழைக்கப்படுகிறார். கும்பகோணம்-திருப்பனந்தாள் தலத்திற்கு அருகேயுள்ள பந்தணைநல்லூரில், ஈசன் பசுபதீஸ்வரராக காட்சி தருகிறார். வசிஷ்டரின் சாபத்தைப் பெற்ற காமதேனு பூஜித்த முக்கிய தலமாக, ‘ஆ’ எனும் பசுவின் பெயராலேயே விளங்கும் தலம்தான் ஆவூர். இது தசரதர் வணங்கிய கோயிலும் ஆகும். வசிஷ்டரால் வாஜபேயம் என்கிற யாகம் இங்கு நிகழ்த்தப்பட்டது. இத்தலம் கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதேபோல திருவண்ணாமலைக்கும் விழுப்புரத்திற்குமிடையேயும் ஓர் ஆவூர் தலம் உள்ளது. தஞ்சாவூர்-அய்யம்பேட்டைக்கு அருகேயுள்ள பசுபதி கோயில் இறைவன், பசுபதீஸ்வரர் எனப்படுகிறார்.
தஞ்சைக்கு அருகேயுள்ள தென்குடித்திட்டை கோயில் இறைவனான பசுபதீஸ்வரர், காமதேனுவால் பூஜிக்கப்பட்டதால் அப்பெயர் கொண்டார்.
மாடுகளை கட்டும் தொழுவத்துக்குப் பட்டி என்றும் பெயர். இதையொட்டியே நிறைய ஊர்களுக்குப் பின்னால் பட்டி என்று சேர்த்தார்கள். கும்பகோணத்திற்கு அருகிலுள்ள பட்டீஸ்வரத்தில் தேனுபுரீஸ்வரராக ஈசன் அருள்கிறார். இதுவும் காமதேனுவால் பூஜிக்கப்பட்டதே. கொங்கு நாட்டிலுள்ள பெரும்பாலான சிவாலயங்கள் காமதேனுவால் வணங்கப்பட்டவை. அவற்றில் முக்கியமாக, ஆதிபட்டீஸ்வரம் என்றழைக்கப்படும் பேரூர் தலத்தைச் சொல்லலாம். இங்குள்ள ஈசனின் பெயர், பட்டீஸ்வரர். கும்பகோண பட்டீஸ்வரத்திலிருந்து இதனைத் தனியே பிரித்துக் காட்ட, இத்தலத்தை ஆன்பட்டீஸ்வரம் எனவும்
அழைத்தனர்.
தங்களை தற்காத்துக்கொள்ள, திரு ஆமாத்தூர் என்கிற திருவாமாத்தூரில் பசுக்கள் ஈசனை வழிபட்டு, கொம்பைப் பெற்றன. விழுப்புரத்திற்கு அருகிலுள்ள இத்தலத்தை பசுக்களின் தாய்வீடு என்றே அழைப்பர். திருவாரூர், நன்னிலத்திற்கு அருகே கொண்டீச்சரம் அமைந்துள்ளது. பார்வதி தேவிக்கும் காமதேனுவின் மகளுக்கும் கொண்டி என்கிற பெயர் உண்டு. இந்த கொண்டியான அம்பிகை, பசு வடிவத்தில் சிவனை வணங்கியதால், இறைவன் பசுபதீஸ்வரர் ஆனார்.
சென்னை, குன்றத்தூருக்கு அருகேயுள்ள கோவூரில் சிவபெருமான் பார்வதி தேவிக்கு அழகு சுந்தரராக காட்சியளித்தார். ‘கோ’ எனும் பசு வழிபட்டதாலேயே இன்றும் கோவூர் என்றழைக்கப்படுகிறது. கோமளம் என்கிற சொல்லுக்கு கறவைப்பசு எனும் பொருளும் உண்டு.
இப்படி கறவைப் பசுவால் வழிபடப்பட்ட கோமளேஸ்வரர் திருக்கோயில் சென்னை-சிந்தாதிரிப் பேட்டையில் அமைந்துள்ளது. சென்னை-மாடம்பாக்கத்திலுள்ள ஈசனை பசு(காமதேனு) பூஜித்ததால், அவர் தேனுபுரீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். மிக ஆச்சரியமாக பொள்ளாச்சிக்கு அருகே களந்தை எனும் தலத்தில் கருவறையிலேயே அம்பிகை பசுவோடு சேர்ந்து எழுந்தருளியிருக்கிறாள். நாகப்பட்டினத்திற்கு அருகேயுள்ள சிக்கல் முருகன் தலத்தில் உறையும் ஈசனின் திருப்பெயர் வெண்ணெய்பிரான் என்பதாகும். இங்கு, காமதேனுவின் பால், குளமாகத் தேங்கி வெண்ணெயாக மாறியதை வசிஷ்டர் லிங்கமாக்கி வழிபட்டார்.
தேனு என்று ஊரின் பெயரோ, ஈசனின் திருப்பெயரோ இருந்தால், அவையெல்லாம் பசு பூஜித்த தலங்களாகும். மேல்மருவத்தூர்-அச்சிறுப்பாக்கத்திற்கு அருகே தேன்பாக்கத்தில் பசுபதீஸ்வரர் ஆலயம் உள்ளது.
அதேபோல கபிலா என்றும் பசுவிற்கு ஒரு பெயர் உண்டு. இப்படி கபிலையால் பூஜிக்கப்பட்ட தலமாக, திருப்பதி மலையடிவாரத்தில் கபிலேஸ்வரர் ஆலயம் உள்ளது. நெல்லை, சங்கரன் கோவிலில் அம்பிகை பசு வடிவில் தேவர்கள் சூழ ஈசனை வணங்கினாள். கோ எனும் பசுவாக தேவி வழிபட்டதால் கோமதி என்றே இன்றும் வணங்கப்படுகிறாள். கோமாதாவை வணங்கினால் கோடி புண்ணியம் கிடைக்கும். கோசாலை என்கிற பசுக் கொட்டிலின் அருகே சென்றாலேயே தெய்வீக அதிர்வுகளுக்கு நாம் ஆட்படுவது நிச்சயம். மனம் அமைதியாவதை உணர முடியும். அதனால்தான் பெரியோர்கள், கோசாலையில் அமர்ந்து நாம ஜபம் செய்வது, கோடி மடங்கு பலன் தரும் என்று சொல்லி வைத்தார்கள். எங்கே பசுவைப் பார்த்தாலும் மனதுக்குள் வணங்குவதும், ஏதேனும் கோசாலைக்கு (பசுமடம்) இயன்ற உதவிகளை அளிப்பதும் நம் வாழ்வில் வளம் சேர்க்கும் என்பது திண்ணம்.
நன்றி :://www.kalapam.ca/

No comments:

Post a Comment