Wednesday, January 23, 2013

சாஹிவால்


சாஹிவால் மாடுகள் ரொம்பவும் உணர்வுப் பூர்வமானது. அதை அடிச்சு அடக்கணும்னு நாம நெனச்சா... கண்டிப்பா அடங்காது.


காட்டு வாழ்க்கையில் இருந்து, நாகரிகப் பாதையில் நடைபோடத் தொடங்கிய மனிதன், பாலுக்காக மட்டுமல்லாமல்... உழவு, பாரம் இழுத்தல், போக்குவரத்து என பல வகையிலும் உதவும் என்பதற்காக தன்னுடன் சேர்த்துக் கொண்ட விலங்குகளில் ஒன்றுதான் மாடு!

கன்னியாகுமரி தொடங்கி, காஷ்மீர் வரை பல்வேறு பெயர்களில் வகைவகையான இன மாடுகள் இங்கே இருக்கின்றன. ஆனால், காலப்போக்கில்... 'அதிக பால்' என்கிற கோஷம் இந்தியாவில் உரத்து ஒலித்ததோடு, மாடுகளின் பிற தேவைகளும் குறைய ஆரம்பித்துவிட்டது. இதனால், நம் நாட்டு ரக மாடுகள் எல்லாம் 'அடிமாடு' எனும் நிலைக்குத் தள்ளப்பட்டு, வெளிநாட்டுக் கலப்பின மாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்க ஆரம்பித்துவிட்டது.

அதேசமயம், 'நம் நாட்டு மாடுகளிலும் அதிக பால் கொடுக்கும் மாடுகள் இருக்கின்றன' என்கிற உண்மையை உணர்ந்த தமிழக விவசாயிகளில் சிலர், வடமாநிலங்களில் இருந்து அத்தகைய மாடுகளை வாங்கி வந்து வளர்த்து வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம், கோனூர் கிராமத்தைச் சேர்ந்த திம்மையா, அவர்களில் ஒருவர். நாட்டு மாடுகளைப் பற்றி கேட்டால், மடை திறந்த வெள்ளமாக வந்து விழுகின்றன அவரிடமிருந்து வார்த்தைகள்...

ஒரு டோஸ் விந்து 1,500 ரூபாய்!

''விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்குற குடும்பம் எங்களோடது. அப்பா திடீர்னு இறந்ததும் விவசாயத்தை நான் கையில எடுக்க வேண்டியதாயிடுச்சு. விவசாயத்துக்காக அப்பா கடன் வாங்கியிருந்தார். கொஞ்ச நிலத்தை வித்து, அதையெªல்லாம் அடைச்சேன். 'வருஷம் முழுக்க ஓய்வில்லாம உழைச்சாலும், விவசாயத்துல கடன் மட்டுமே மிச்சமாகுறது ஏன்... என்ன காரணம்?'னு அடிக்கடி யோசிச்சிகிட்டே இருப்பேன். அப்பத்தான் இயற்கை விவசாயத்தைப் பத்தி தெரிய வந்துச்சு. இப்ப, 10 வருஷமா இயற்கை விவசாயம்தான். சுபாஷ் பாலேக்கரோட 'ஜீரோ பட்ஜெட் பயிற்சி'யில கலந்துகிட்ட பிறகு, நாட்டு மாடுங்க மேல தனி மரியாதை வந்துடுச்சு. உடனே, உம்பளாச்சேரி ரக மாடுங்க ரெண்டை வாங்கி வளர்க்க ஆரம்பிச்சுட்டேன். பயிருங் களுக்குத் தேவையான ஜீவாமிர்தத்துக்கு சாணம், மாட்டுச் சிறுநீர் இதுக்கெல்லாம் பிரச்னை இல்லாம போயிடுச்சு.

இதெல்லாம் சரி... கலப்பின மாடுங்க மாதிரி அதிகமா பால் கிடைக்க மாட்டேங்குதேனு ஒரு யோசனையோட, நாட்டு மாடுகள் பத்தின தகவல்களைத் திரட்டத் தொடங்கினேன். வெளிநாட்டு மாடுகளுக்கு சமமா பால் கொடுக்குற நாட்டு ரக மாடுகள் வட இந்தியாவுல இருக்குனு தெரிஞ்சுகிட்டு, அதை வாங்கற முயற்சியில இறங்கினேன். இதுக்கு நடுவுல, 'கிர்’ மாட்டோட விந்தை, உம்பளச்சேரி பசுவுக்கு செயற்கை கருவூட்டல் செய்யலாமே'னு ஒரு யோசனை தோணுச்சு. அதுக்காக சேலத்துல இருக்கற ஒருத்தர்கிட்ட கேட்டேன். 'ஒரு டோஸ்... 1,500 ரூபாய்’னு சொன்னார். நாட்டுமாட்டு விந்துவுக்கு உள்ள கிராக்கியைப் பாத்த பிறகு, செயற்கை முறை கருவூட்டுறது தொடர்பான பயிற்சி எடுத்துக்கிட்டு, அந்த வேலையையும் செய்ய ஆரம்பிச்சுட்டேன்.

ஒரு மாடு... 60 ஆயிரம் ரூபாய்!

மாடு வாங்கறதுக்காக குஜராத், பஞ்சாப், ஹரியானா பகுதிகளுக்கு நேர்ல போனேன். அதுல என்னை அதிகமா கவர்ந்தது... சாஹிவால் ரக மாடுங்கதான். சாதாரணமா மேய்ச்சலுக்கு போயிட்டு வந்து, 15 லிட்டர் தொடங்கி, அதிகபட்சம் 20 லிட்டர் வரை பால் கறக்குறத நேர்ல பார்த்ததும், ஆச்சரியமா போச்சு. மேய்ச்சலைத் தவிர வேறெந்த தீவனத்தையும் கொடுக்காமலே இவ்வளவு பால் கறக்குதே... இதை வாங்கிட்டு போயே தீரணும்னு முடிவெடுத்தேன்.



எங்கூட வந்திருந்தவங்களோட சேர்ந்து 10 மாடுகள வாங்கினேன். ஆனா, அதுங்கள தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து சேர்க்கறது சாமானியப்பட்ட வேலையா இல்ல. நம்ம ஊருல லாரிகள்ல மாடுகளை ஏத்திட்டு போனா... யாரும் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டாங்க. வடமாநிலங்கள்ல அங்கங்க கிராம மக்களே வண்டியை மறிச்சுடறாங்க. 'அடிமாட்டுக்கு கொண்டு போகல. வளர்க்கறதுக்குத்தான் கொண்டு போறோம்'னு ஆதாரத்தோட புரிய வெச்சுட்டு வர்றதுக்குள்ள தாவு தீந்துடும். அதுபோக அனுமதி, போக்குவரத்துனு செலவும் அதிகமா பிடிக்கும். அதாவது, ஒரு மாட்டோட விலை தமிழ்நாட்டுக்கு வரும்போது 60 ஆயிரம் ரூபாய் ஆயிடுது.

குறைந்த பராமரிப்பு!

பெரும்பாலும் பாலுக்காக மட்டும்தான் இப்பல்லாம் மாடுகள வளர்க்கறாங்க. அதனாலதான், வெளிநாட்டு மாடுகள வளர்க்கறதுல விவசாயிக அதிக ஆர்வம் காட்டுறாங்க. ஆனா, அந்த மாடுகளுக்கு எந்த வகையிலும் குறைஞ்சதில்ல... சாஹிவால் மாதிரியான நம்ம நாட்டு மாடுகள். கிடைச்சதைத் தின்னுட்டு, நாளண்ணுக்கு அதிகபட்சம் 20 லிட்டர் வரைக்கும் பால் கொடுக்குது சாஹிவால் ரக மாடுகள். வெளிநாட்டு மாடுகள வெயில், மழைக்கு பாதுகாத்து வளர்த்தாலும், பால் மூலமா வர்ற வருமானத்துல சரிபாதி தீவனத்துக்கே செலவாயிடுது. ஆனா, இந்த மாடுகளை வளர்த்தா... தீவனச் செலவை பத்தி அதிகமா அலட்டிக்கத் தேவையில்ல. குறைஞ்ச செலவு, குறைஞ்ச பராமரிப்புலயே அதிக பால் கொடுக்கும்.

வருடத்தில் 6,000 கிலோ பால்!



இந்தியாவுல பாலுக்கான சிறந்த பசு இனம்னா... அது இந்த சாஹிவால் ரக மாடுங்கதான். ஒரு ஈத்துல (305 நாட்கள்)... 3,000 கிலோ முதல் 6,000 கிலோ வரைக்கும் பால் கொடுக்கற அற்புத இனம். இதோட பால்ல 4 முதல் 4.5 சதவிகிதம் கொழுப்புச் சத்து இருக்குது. பெரிய மடி, நல்ல சிவப்பு நிறம், கனமான குட்டைக் கொம்பு, சிறிய திமில், கம்பீரமான உடலமைப்புனு பார்க்கறதுக்கே அம்சமா இருக்கும். கடுமையான வெப்பம், கடுமையானப் பனி, மழைனு எதுக்கும் சளைக்காது. வெளிநாட்டு மாடுக, குளிர்காலத்துல அதிகமாகவும், வெயில் காலத்துல கம்மியாகவும் பால் கொடுக்கும். ஆனா, சாஹிவால் உள்ளிட்ட நாட்டு மாடுக, எப்பவும் ஏற்றத் தாழ்வு இல்லாம ஒரே அளவா பால் கொடுக்கும்.

பஞ்சாப் மாநிலத்திலதான் இந்த மாடுகள அதிகமா வளர்க்குறாங்க. நம்ம ஊர்ல செம்மறி ஆடுகளை மந்தையாக மேய்க்குறது மாதிரியே, இந்த மாடுகளை மந்தை, மந்தையா மேய்க்கறாங்க. அதனால இந்த மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போடுறதே இல்லை. ரொம்ப தூரம் வரைக்கும் மேய்ச்சலுக்கெல்லாம் போயிட்டு வருது. கை வளர்ப்பா வளர்த்தா சொன்னதெல்லாம் கேட்கற அற்புதமான மாடு சாஹிவால். நம்ம ஊருல மாடுகளை முன்னவிட்டு, பின்னாடி போறோம். வடநாட்டுல மேய்க்கறவரு முன்ன போக, அவருக்கு பின்னாடியே போகுது மாடுகள். அதுக்கு காரணம் மாடுகளை வளக்குற முறைகள்தான்.

அன்புக்கு அடிமை!

சாஹிவால் மாடுகள் ரொம்பவும் உணர்வுப் பூர்வமானது. அதை அடிச்சு அடக்கணும்னு நாம நெனச்சா... கண்டிப்பா அடங்காது. முரண்டு பிடிச்சுகிட்டே இருக்கும். அதேநேரத்துல தடவிக் கொடுத்து அன்பா வளர்த்தா, நாய்க் குட்டி மாதிரி காலை சுத்திகிட்டே இருக்கும். பொதுவா எந்த மாடா இருந்தாலும், ஒரே இடத்தில கட்டிப் போடக்கூடாது. தினமும் 3 மணி நேரமாவது சூரிய ஒளி மாடுகளின் உடலில் படுற மாதிரி நடக்க விடணும்.



சாஹிவால் மாடுக 18-ம் மாசத்துல பருவத்துக்கு வந்துடும். நான் வாங்கிட்டு வந்த மாடுகளை மேய்ச்சல் முறையில வளக்குறேன். ஒரு பசுவுக்கு சராசரி 13 லிட்டர் பால் கிடைக்குது. இந்த ரக மாடுகள் கூட்டமா இருக்கத்தான் விரும்பும். அதுனால குறைஞ்சது 5 மாடுகளையாவது ஒண்ணா சேர்த்துதான் வளர்க்கணும். நம்ம ஊருல இந்த மாடுகளை இப்பத்தான் வளர்க்க ஆரம்பிச்சுருக்காங்க. அதுகளோட எண்ணிக்கை பெருகுறப்ப... இங்கேயே விலை குறைச்சலா கிடைக்க வாய்ப்பிருக்கு'' என்று விரிவாகப் பேசி முடித்த திம்மையா... தேநீர் கொடுத்து உபசரித்தார். அதையருந்தி விடைபெற்ற நம்முடைய நாக்கில், சாஹிவால் மாட்டின் பால் கலந்த அந்தத் தேநீர் சுவை நெடுநேரம் நீடித்தது!

சிந்து சமவெளி மாடுகள் !

பாகிஸ்தான் பகுதியில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் சாஹிவால் என்பது ஒரு மாவட்டம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரிகம் பரவியிருந்த பூமி இது. இங்கு, அதிகமாக இந்த ரக மாடுகள் இருக்கின்றன. அதனாலேயே 'சாஹிவால்' என்ற பெயரில் இந்த மாடுகள் அழைக்கப்படுகின்றன. சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த முத்திரைகளில் உள்ள மாடுகளைப் போல அச்சு அசலாக இருக்கின்றன இந்த மாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது!

அருமை தெரிந்த ஆஸ்திரேலியா!

சாஹிவால் ரகத்தின் அருமை தெரிந்த ஆஸ்திரேலியா, கென்யா போன்ற நாடுகள், இந்தியாவில் இருந்து மாடுகளைக் கொண்டு சென்று, இனப்பெருக்கம் செய்து, உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன.

ரெட்சிந்தி, கிர்!

கிர், ரெட்சிந்தி போன்ற நம் நாட்டு மாடுகள், கலப்புத் தீவனங்கள் எதுவும் இல்லாமல், சாதாரணமாக மேய்ச்சலுக்கு சென்று வந்தே 10 முதல் 18 லிட்டர் பால் வரைக் கொடுக்கக் கூடியவை. இவற்றுக்கு தனியாக பராமரிப்புத் தேவையில்லை.

நாட்டு மாடு வளர்த்தால் 25 % மானியம்!

நாட்டு மாடுகள் வளர்ப்பை ஊக்குவிக்கும் நபார்டு வங்கி, நாட்டு மாடு வளர்ப்பதற்கான மொத்தத் தொகையில்

25 சதவிகிதத்தை மானியமாக வழங்கி வருகிறது.

ஜெல்லி தயிர்!

சாஹிவால் மாட்டு நெய், தயிருக்கு பெரும் கிராக்கி இருக்கிறது. இதன் தயிர் ஜெல்லி மாதிரி மிகவும் கெட்டியாகவும், ருசியாகவும் இருக்கும்


Source:-/nermai-endrum.blogspot.in/

No comments:

Post a Comment