Thursday, March 21, 2013

காஞ்சி ஸ்ரீ மகாபெரியவர்- ஞானியின் வெள்ளரிப்பழ முக்தி!


மாயையை விட்டு ஞானி விலகுகிறான் என்று இல்லாமல் ஞானியை விட்டே மாயை விலகுகிறது. இந்த விஷயம் த்ரயம்பக மந்திரத்திலும் சொல்லப் பட்டிருக்கிறது. பந்தத்திலிருந்து உர்வாருகம் மாதிரி விடுபட வேணும் என்று முக்கண்ணனான பரமேச்வரனைப் பிரார்த்திக்கும் மந்த்ரம் அது. பந்தம் என்பது ஸம்ஸôர மாயை. அதுதான் த்வைத இந்திர ஜாலம். உர்வாருகம் என்பது வெள்ளரி.
வெள்ளரிப் பழம் மாதிரி விடுபட வேண்டும் என்றால் என்ன? 
அந்தப் பழம் முற்றிக் கனிந்த பிறகும் மற்ற பழங்கள் மரத்திலிருந்து விழுவதுபோல் விழுவதில்லை. ஏனென்றால் அது பழுப்பது, காய்ப்பது எல்லாமே மரத்தில் இல்லை கொடியில்தான். வெள்ளரி என்பது கொடியே தவிர செடியோ மரமோ இல்லை. அந்தக் கொடியையும் பந்தல் போட்டு படர விடும் வழக்கம் கிடையாது. முழுக்க பூ ஸ்பரிசம் இருந்தால்தான் அந்தக் கொடியின் வளர்ச்சிக்கு நல்லது என்பதால் நிலத்திலேயேதான் படர விடுவது வழக்கம். அதனால், ஒரு வெள்ளரிக்காய் நன்றாகக் கனிவதும் நிலமட்டத்தில்தான். இப்படி பழம் முற்றி கனிந்தவுடன் காம்பு, தானே இற்றுப் போய்விடும். ஆனாலும் பழம் இருந்த இடத்திலேயேதான் இருக்கும். ஏனென்றால் அதுதான் விழ முடியாமல் நில மட்டத்திலேயே இருக்கிறதே! கொடி படர்ந்து கொண்டே இருக்கும். அப்போது பழம் எந்த இலைப் பாகத்தோடும் காம்போடும் ஒட்டிக் கொண்டிருந்ததோ அவையும் சற்று தள்ளி நகர்ந்து போய்விடும். அதாவது, காம்புதான் இதை விட்டு விலகிற்றே தவிர, இது விலகுவது, விடுபடுவது என்பது இல்லையே.
இதே போலத்தான், ஞானி சம்ஸôர பந்தத்திலிருந்து விடுபடுவது என்பது. அது ஒரு விருட்சம் மாதிரியும், இவன் அதில் முற்றிப் பழுத்து விழுவது மாதிரியும் இல்லை. ஞானத்தில் அவன் பழுத்த பழமான பின்னும், அவன் இருந்தபடியேதான் இருப்பான். வெளியிலே அவன் செயலாற்றினாலும் உள்ளே சலனமே இல்லாமல்தான் இருப்பான். ஸம்ஸôரத்திலிருந்து விடுபட்டு அப்புறம் மோட்சம் என்று எங்கேயோ ஓர் உலகத்துக்குப் போவது என்பதே அவனுக்கு இல்லை.
துவைதிகள்தான் அப்படி எங்கேயோ உள்ள ஒரு மோட்சத்துக்குப் போவது. அத்வைத ஞானி இங்கேயே, இந்த லோகத்திலேயே, சரீரத்திலே இருப்பதாகத் தெரியும்போதே ஆத்ம சாட்சாத்காரம் பெற்றவன். அதுதான் விடுபட்ட நிலையான மோட்சம் என்பது. விடுபட்ட என்றாலும், இவன் ஒன்றும் விடுபடும் காரியம் பண்ணவில்லை. இவன் பண்ணியது ஆத்மாவே குறியாக விசாரம் செய்ததுதான். அதனால் சாட்சாத்காரம் வந்து, தான் ஆத்மாவே என்று தெரிந்து கொண்டு அதுவாகவே இருப்பான். அப்போது பந்தம், சம்ஸôர மாயை என்பது அதுவே கத்தரித்துப் போய்விடும்.
துவைதம் நகர்ந்து ஓடிப் போய்விடும். வெள்ளரிப்பழம் பூமியிலே இருப்பதுபோல இவனும் லோகந்தில் முன்பு எங்கே இருந்தானோ அங்கேயே ஜீவன்முக்தன் என்ற பெயரில் தொடர்ந்தும் இருந்து கொண்டிருப்பதாகத் தெரியும்.
ஆனாலும் லோகத்தில் தனி ஜீவ மனஸின் வாழ்க்கை என்று வேரோடிப் படர்ந்திருந்த ஒரு கொடியோடு இவனுக்கு முன்பு இருந்த பிணைப்பு இப்போது கத்தரித்துப் போயிருக்கும். இவனாக விடுபடாமலே, இவனை விடுவித்துவிட்டு, அது ஓடிப் போயிருக்கும். இதுதான் வெள்ளரிப்பழ முக்தி
நன்றி:வெள்ளிமணி-நாள்-22/3/2013.

1 comment:

  1. பதிவாக்கி பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

    ReplyDelete