Saturday, March 16, 2013

சிறப்புக் கட்டுரை - கோ மாதா எங்கள் குல மாதா


எட்டிக்காயும் இறைவன் படைப்பே. எள்ளும் அவன் படைப்பே. அன்னாசிப்பழமும் அரளிக்காயும் அவன் படைப்பே. இருந்தாலும், எள்ளும் அன்னாசிப் பழமும் மனிதருக்கு ஏற்றதாக இருப்பது போல எட்டிக்காயும், அரளிக்காயும் இன்னும் பலவும் இல்லை.


அருவி நீரும், ஆற்று நீரும், கிணற்று நீரும், கடல் நீரும், குளத்து நீரும், நீர் தான் என்றாலும், எல்லா நீரும் அனைத்து மனிதர்க்கும் ஒரே அளவிலும், எப்பொழுதும் எல்லாத் தேவைகளுக்கும் பயன் படுவதாக அமையவில்லை.

தொன்றுதொட்டு மனித இனம் தான் கண்டவற்றில், சிலவற்றையே மிக்க பயன் அளிப்பதாக அனுபவித்து உள்ளது. அதன் அடிப்படையிலேயே, அவற்றை போற்றி பாராட்டி தெய்வமாகவும் வழிபட்டு வந்திருக்கின்றது.. 

மரங்களில் வாழையையும், தென்னையையும், வேம்பையும், நம்மிடம் நன்றி பாராட்டுவதில் நாயையும் போற்றுவது போல, பசுவையே எல்லா இனங்களுக்கும் மேலாக வணங்கி, அட்சய பாத்திரமாக வற்றா ஊற்றாக போற்றி வருகிறது.

வேறு எதற்கும் அளிக்கப்படாத ஒரு தனிப் பெருமையை பசுமாட்டிற்கு மட்டும் இந்து மதம் அளித்து வந்திருக்கிறது. 

பசுவை வெறுமனே மாடு என்று அழைக்காமல், பசுத்தாய், கோமாதா என்று வழங்கி வந்திருக்கிறது. 

பெற்ற தாய்க்கு ஈடாக கருதப்படும் ஒரே மிருகம் பசு மட்டுமே. 


ஐக்கிய ஸ்வரூபம் கோமாதா

எல்லாமே இறை வடிவம் என்றாலும், நாம் தொன்றுதொட்டு, சிலவற்றிலேயே, சில வடிவங்களிலேயே, அனைத்து குணங்களின் ஐக்கியத்தை உணர்ந்திருக்கிறோம்.


அர்த்த நாரீஸ்வரரில் சிவ-சக்தி ஐக்கியத்தையும்,
சங்கர நாராயணரில் சிவ-விஷ்ணு ஐக்கியத்தையும்,
லக்ஷ்மி நாராயணரில் விஷ்ணு-லக்ஷ்மி ஐக்கியத்தையும்,
நரசிம்மரில் மனித-மிருக ஐக்கியத்தையும், 
தாணுமாலயனில் ஹரி-ஹர-ப்ரும்ம ஐக்கியத்தையும்,
கணபதியில் யானை-தேவர்கள் ஐக்கியத்தையும்,
ஏகபாத த்ரிமூர்த்தியில் மூவரின் இணைவையும் காண்கிறோம். 

பலவற்றுள் ஐக்கியப்பாடு வெளிப்படையாக தெரியாவிட்டாலும் எல்லாமே சர்வ குண ஐக்கிய வடிவமே. யாவுமே நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாசம் ஆகிய பஞ்ச பூதங்களின் ஒவ்வொரு வகை அளவு கலவை வடிவமே. 

ஆணும் பெண்ணும் வித்தியாசமாக தோன்றினாலும், இரு பாலாருமே 45 'X' 'Y' க்ரோமசோம்களின் கூட்டே. இவற்றில் ('X' 'Y' - ல்)ஒன்று கூடினால் ஆண் என்றும், மற்றொன்று கூடினால் பெண் என்றும் கூறுகிறோம்.

ஒவ்வொரு ஜீவ அணுவின் அடிப்படை அமைப்பான DNA, ஒரு மனிதரின் பல்லாயிரக் கணக்கான மூதாதையர்களின் குணங்களை உள்ளடக்கி இருப்பது போலவும், மிகச்சிறிய ஆலம் விதை பிரும்மாண்டமான ஆலமரத்தின் தன்மைகளை உள்ளடக்கியிருப்பது போலவும், ஒவ்வொரு பசுவும் அனைத்து தேவரின் ஒருமை வடிவமாகும்.


இங்கு ஒரு முக்கியமான செய்தியை கவனிக்க வேண்டும். இந்து மதம் பசுமாட்டைத் தவிர வேறு எந்த இனமும் தெய்வசக்தியற்றது என்று கூறவில்லை. 

காலையில் எழுந்தவுடன் நம் உள்ளங் கைகளைப் பார்த்து நுனிப்பகுதியில் மகாலக்ஷ்மியும், இடையில் சரஸ்வதியும், கணுப்பகுதியில் பார்வதியும், (முச்சக்திகளும் இருப்பதை) நினைவுபடுத்திக் கொள்ளும் வழக்கம் இன்றும் உள்ளது. 

எனினும் தோட்டத்துக் கனியை அறியாமல் இருப்பதே பொது குணம் என்பதால் நாம் நம்மை அறிவதற்கு ஏதுவாக பரம்பொருளை, முதலில் பிறவற்றில் இருப்பதை உணர, பல வழிவகைகளை இந்து மதக்கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. இவ்வடிப்படையில் தோன்றியதே கோபூஜை (பசு வழிப்பாடு). 

உலகில் உள்ள கோடிக்கணக்கான கீரை, காய், கனிகளையும், தெரிந்த பின்னரே சிலவற்றை உபயோகிப்போம் என்பதில்லை. 

நமக்கு நன்மை அளிப்பதாக அறிந்ததை உடனே பயன்படுத்திடுகிறோம். 

இது போல பூச்சி முதல் பிரும்மாண்டமான இனம் வரை, ஒவ்வொன்றின் தெய்வ அம்சத்தை உணரும் வரை காத்திராமல், பசுமாடு போன்று, தெய்வாம்சம் அறியப்பட்ட இனங்களை வழிபட்டு பயன் பெறுவதே அறிவுடைமை. 

நன்மை அளிப்பதாக அறிந்ததை மறந்திடக் கூடாது என்றும் கிடைத்த கனியை நழுவவிடக் கூடாது என்பதற்காகவும் துவங்கப்பட்டு தொடர்வதே கோமாதா பூஜையாகும். 

எல்லோரும் தத்தம் வீட்டிலேயே, பசு வழிபாடு செய்ய இயலாதிருக்கலாம் என்றே ஒவ்வொரு ஆலயத்திலும், பசுத்தொழுவம் அமைத்து, அன்றாடமும், கோபூஜை நடத்தும் மரபு ஏற்பட்டிருக்கிறது. 

ஒவ்வொரு ஆலயத்திலும் "கோ சாலை" (பசு மடம்) இருந்தால் அருகில்வாழ் மக்கள் அனைவரும் பசு பராமரிப்பிலும், பசு வழிபாட்டிலும் கலந்து கொள்ள முடியும். 

தினமும் பசுமடத்தில் விரிவான பூஜை செய்ய இயலாவிட்டாலும் வெள்ளிக்கிழமை தோறும் பூஜை செய்வது மேன்மை. அதோடு, முக்கிய நாட்களில் அல்லது பல்லோரும் கலந்து கொள்ள வாய்ப்புள்ள நாட்களில், பெரிய அளவில் 108 கோ பூஜை, 1008 கோ பூஜை செய்யலாம். ஆலயத்திற்கு மட்டுமின்றி, அருகுள்ள மக்களுக்கு மட்டுமின்றி அகிலத்திற்கே அனைத்து நன்மையும் அளிக்கும்.

பசுத்தாய் - கோமாதா (பெருமையும், பராமரிப்பும், பூஜையும்) 



பாரதத்தில் வேதகாலம் தொடங்கி, இன்று வரை, பசுவின் (கோமாதாவின்) பெருமையையும், அதனைப் பராமரிக்க வேண்டிய அவசியத்தையும், பசு இனத்தை வழிபாடும் முறைகளையும், தெரிவிக்காத இறை நூல்களே இல்லை எனலாம்.

- அவனருள்

புராணங்களில் (வரலாறுகள்) மற்றும் இறை இலக்கியங்களில், பசுவை போற்றியவர்கள், பராமரித்தவர்கள், காப்பாற்றியவர்கள் அடைந்த நன்மை நிகழ்வுகள் பல்லாயிரக்கணக்கில் உள்ளன. அவற்றை தொகுப்பதோ, முக்கியமானவற்றை நினைவு கூறுவது மட்டுமோ நோக்கம் அல்ல.

நம் நன்மை நாடி நாம் பசுவை ஆதரிக்க வேண்டும் என்பதை விட, பசுக்களைப் பராமரிப்பது நம் கடமை என்பதை வலியுறுத்துவதே நோக்கமாகும்.

கோ பூஜையினால், கோ தானத்தினால் அடையும் நன்மைகள் தெரிவிக்கப்பட்டிருப்பினும், பசுப்பராமரிப்பு நம் அனைவரின் அதி அவசரமான அவசியமான பணியாகும் என்று எல்லோரும் உணர வேண்டும்.

பசு வழிபாடு மூட நம்பிக்கை அல்ல; நம் மூதாதையர்களின் அறிவுடைமையால் உருவான மிக முக்கியமான செயல்பாடே. நவீன வாழ்முறை மோகத்தினால், பண்டையோர் விஞ்ஞான அடிப்படையில், மெய்ஞானமும் கூட்டுவதாக அளித்துள்ள பாரம்பரியப் பண்பாட்டை மறவாதிருக்க, பின்பற்றிட இறையருள் வைக்கட்டும் அவனருள்.

பசு (கோமாதா) வழிபாடு.

மேற்கத்திய வரலாற்று இயல் காலத்துக்கும் முன்பிருந்தே "சனாதன தர்மம்" என்ற இந்துமதம், "எல்லாம் இறை மாயம்" என்றும் "தத்வமசி" அதாவது "நீயும் பரம்பொருளே" என்றும் "அத்வைதம்" - எல்லாம் ஒன்றே - அதாவது "பரம்பொருள் இன்றி வேறொன்றும் இல்லை" என்றும் "காண்பவை எல்லாம், கடவுளின் எண்ணற்ற தோற்றங்களே" என்றும் கூறி வந்திருக்கின்றது.. இந்நிலையில்,

மிருக இனங்களில், பசுவையும், யானையையும்,
ஊர்வனவற்றில் நாகப் பாம்பையும்,
தாவர இனத்தில் அரசு, வேம்பு, போன்ற சிலவற்றை மட்டும்,
மிகச் சிறப்புடையதாக, நம்மிலும் மேலாக, தெய்வங்களாக,
தொன்று தொட்டு வழிபட்டு வருவதும்,
அவ்வழக்கத்தை தொடர்ந்திட வேண்டும் என்று கோருவதும்,

பாரபட்சமற்ற செயல் தானா?
ஞாயமான பரிந்துரை தானா?

இந்துக்கள், பசுவையையும், யானையையும், பாம்பையும், வேம்பையும் சிறப்புடையதாகப் போற்றி வந்திருக்கின்றனர் தவிர, பிறவற்றை இழிவு படுத்தவில்லை, அழிக்கச் சொல்லவுமில்லை.
எந்த சிற்றின உயிர்களையும் துன்புறுத்தக்கூடாது என்றும் அவற்றைப் போற்றிப் பேண வேண்டும் என்றுமே இந்துக்கள் வலியுறுத்தி வந்திருக்கின்றனர்.

திருக்குளங்களில் மீன்களுக்கு இரை போடுவதும், ஈ, எறும்பு, எலி போன்றவற்றுக்கு உணவாக வாசலில், வாயிற்படிகளில் பச்சரிசி மாக்கோலம் போடுவதும், புற்றுகளில் பாம்புக்குப் பால் வைப்பதும், அன்றாடம் பகலில் காக்கைக்கு உணவளிப்பதும், இரவு வேளையில் நாய்களுக்கு உணவளிப்பதும், பறவைகளுக்கு உணவாக நேர்கதிர்களைத் தொங்கவிடுவதும், இந்துக்களின் வழக்கமாக இருந்து வருகிறது.

இதோடு, சிற்றினங்களை நமக்குச் சமமாக மட்டுமின்றி, மேலானவையாகவும் நாம் கருத வேண்டும் என்பதற்காக, பெரும்பாலான தெய்வங்களின் வாகனங்கள் மிருகங்களாகவே, பறவைகளாகவே இருப்பதாக விவரிக்கப்பட்டுள்ளன.

- விநாயகன் யானைத்தலையன்
- அவன் ஆட்கொண்டு அமர்ந்திருப்பது மூஞ்சூறு
- தம்பி முருகன் மகிழ்ந்து வருவது மயிலில்
- தகப்பன் சிவன் அணிந்திருப்பது நாகம்
- மாமன் திருமால் படுப்பது பாம்பணையில்
- அவன் ஏறும் வாகனம் கருடன்
- எடுத்த உருவங்கள் மீனும், பன்றியும், சிங்கமும்
- தர்மதேவன் வருவது எருமையின் மீது
- சனீஸ்வரனை சுமப்பது காகம்

இப்படி நூற்றுக் கணக்காக பட்டியலிடலாம்.

மேலும், பல இனங்களின் நிலையை ஆய்ந்து, சிலவற்றை, உதாரணமாக, பூரான் தாய்க்கு ஒரு பிள்ளை என்பதற்காக கொல்லப்படக்கூடாது என்றும் வழக்கம் இருக்கின்றது.


கோமாதா நம் குலமாதா! 



பசு பிரசவிக்கும்போது கன்றின் தலைதான் முத லில் வரும். இந்த நிலையில், இரண்டு தலைகள் கொண்ட பசுவை பார்ப்பதுபோல் இருக்கும். அதாவது முன்பக்கமும், பின்பக்கமும் தலைகள் இருப்பது போல் காணலாம். பசு இப்படிக் காட்சி தருவதை 'உபயதோமுகி' என்பர். இந்தக் காட்சியை தரிசிப்பது பெரும் புண்ணியம். இந்த தருணத்தில், பசுவை வலம் வந்து வணங்கினால் நமது சகல பாவங்களும் நீங்குவதுடன், ஈரேழு பதினான்கு உலகங்களிலும் உள்ள சகல தேவதைகளையும் தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.

கன்றுக்கு பால் இல்லாமல், பசுவிடம் இருந்து பால் முழுவதையும் கறந்து விடுபவன், நரகத்தை அடைந்து வேதனையுறுவான். தவிர, மறுபிறவியிலும் மனிதனாகவே பிறந்து, பட்டினியுடனும் நீர் அருந்தவும் முடியாத நோயாளியாகவும் கிடந்து துன்பப்படுவான்.

நெற்றியில் குங்குமப் பொட்டு அளவுக்கு சுழியுடன் திகழும் பசுக்கள் வீட்டில் இருப்பது பெரும் பாக்கியம். அந்த வீட்டில் திருமணம், பிரசவம் போன்ற சுப காரியங்கள் அடிக்கடி நடைபெறும்.

கிராமப் பகுதிகளில் பசுக்களை மேய்ச்சலுக்கு அனுப்புவது வழக்கம். பசுக்களுடன் ஓர் ஆசாமியும் உடன் செல்வான். ஆடி மாதத்தில் ரோகிணி நட்சத்திர நாளில்... மேய்ச்சலுக்குச் சென்று திரும்பும் பசுக்களில், சிவப்பு நிற பசு ஒன்று முதலில் ஓடி வந்து தொழுவத்தில் நுழைந்தால் அந்த வருடம் அதிகம் மழை பொழியும் என்பது ஐதீகம்.

வீட்டில் பசு இருப்பதால், ஐஸ்வர்யம் பெருகும். பசு மாட்டை விற்பதாக இருந்தால், அதை, கட்டி இருக்கும் தாம்புக் கயிற்றுடன் கொடுக்கக் கூடாது. கயிறை நாம் வைத்துக் கொண்டு பசுவை மட்டுமே கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான், வேறு பசுக்கள் உடனடியாக நம் இல்லம் வந்து சேரும் என்பது நம்பிக்கை.

கோமாதாவும் பூமாதாவும் :-

காஞ்சி மஹா பெரியவர் அருளியது

ஜனக மாதாவும், கோமாதாவும் பாலைச் சுரக்கிற மாதிரி தானியங்கள், உலோகங்கள், தாதுக்கள் ஆகிய வளங்களையும், இவை எல்லாவற்றுக்கும் மேலாக நீர்வளம் என்பதையும் பூமி சுரக்கிறது. அதனால் தான் பூமாதா என்பது, பசுத்தாய் என்பது போல் புவித்தாய்.

மிருகமாகத் தெரிகிற பசு, ஜடமாகத் தெரிகிற பூமி ஆகிய எல்லாவற்றிலும் உயிருள்ளதும் அன்பே உருவமானதுமான மாத்ருத்வத்தை - தாய்த் தத்துவத்தை - கண்டு கொண்டு நம்முடைய முன்னோர்கள் கோமாதா என்றும் பூமாதா என்றும் சொன்னார்கள்.

பூமாதாவே கோமாதாவாக உருக்கொண்டதும் உண்டு. த்வாபரயுகம் முடிகிற நிலைக்கு வந்து கலியுகம் ஆரம்பிப்பதற்கு முந்தைய சமயம். லோகத்திலே துஷ்ட அரசர்களின் ரூபத்தில் அசுர சக்திகள் தலையோங்கிய அப்போது பூமாதேவியால் அந்தப் பாபபாரத்தைத் தாங்க முடியவில்லை. 

அப்போது பூமாதேவியும், அவளுடைய சார்பிலே பிரம்மாவும் மஹா விஷ்ணுவிடம் முறையிட்டு பிரார்த்தித்துக் கொண்டதன் மேல் தான் பகவான் க்ருஷ்ணாவதாரம் பண்ணினார். அந்த சமயத்திலே, தன்னுடைய முறையீடு பகவானுடைய மனசைத் தொட்டு இறக்கி, அவரை ரக்ஷணத்துக்கு வரும்படிப் பண்ண வேண்டுமானால் தான், அவருடைய பத்னியான பூமாதேவி ரூபத்திலில்லாமல், அதை விட ப்ரியத்துக்கும் பரிவுக்கும் உரிய தாயான கோமாதா ரூபத்தில் இருந்தால் தான் முடியும் என்பதால் பூமாதாவே கோமாதாவாக உருவம் எடுத்துக் கொண்டு தான் போனாள் என்று புராணக்கதை இருக்கிறது. அதற்கேற்பத் தான் பகவான் கோபாலனாகப் பிறந்து, அந்த அவதாரத்தில் கோக்களோடு அத்யந்தமாக உறவாடினார்.

"கோ" என்றாலே பூமி என்றும் ஒரு அர்த்தம்.

கிருஷ்ணர் பூர்ணாவதாரம். அம்சாவதாரம் என்பதாக பகவான் தன்னுடைய ஒரொரு அம்ச கலையை மட்டும் வெளிப்படுத்தியும் அவதாரங்கள் நிகழ்த்தியதுண்டு. பாகவதத்தில் சொல்லியிருக்கிற கணக்குப்படி பகவானுக்கே இருபத்தி நாலு அவதாரங்கள். அந்த இருபத்து நாலில் நம் எல்லோருக்கும் தெரிந்த தசாவதாரங்கள் போகபாக்கியிருக்கிற பதினாலு பேரும் அம்சாவதாரங்கள். அப்படி பகவானின் அம்ச அவதாரங்களாக இருந்தவர்களில் ப்ருது என்கிற சக்ரவர்த்தியும் ஒருத்தர். அவர் தான் லோகத்தில் நாடு, நகரம் என்ற அமைப்புகளை முறைப்படி ஏற்படுத்தியவர். அவர் பூமாதாவையே கோமாதா ரூபத்தில் கண்டு அந்த பசுத் தாயிடமிருந்து அவரவர்களும் தங்கள் தங்களுக்கு இஷ்டமான சம்பத்துக்களை தங்கள் தங்கள் ஸ்ஸ்வதர்மம் என்ற கன்றைக் கொண்டு கறந்து கொள்ளச் செய்தார் என்று பாகவதத்தில் சொல்லியிருக்கிறது.

கோ ரூபத்தில் பகவானுக்கு எததனை ப்ரீதி என்பதற்காகச் சொன்னேன். கோவுக்கும் அவரிடத்தில் அதேபோல் ப்ரீதி வேணுகோபாலனாக பகவான் இடது பாதத்தை பூமியில் ஊன்றிச் செங்குத்தாக வைத்துக் கொண்டிருக்கும் போது தாமரை மாதிரியான அவருடைய உள்ளங்காலை ஒரு கோ நக்கிக் கொண்டிருக்கும். சித்ரங்களில் அப்படி போட்டிருக்கும்.

மாட்டுப்பொங்கல் இடுவது ஏன்? 

வாயில்லா ஜீவன்களில் மனித சமுதாயத்தோடு இரண்டறக் கலந்து நிற்பது பசு என்றால் 
அது மிகையில்லை. காலையில் எழுந்ததும் "பால் வந்து விட்டதா?" என்பது தான் நம் முதல் கேள்வியாக இருக்கிறது. அன்போடு வாஞ்சையாக "அம்மா'' என்று பசு அழைக்கிறது. ஆனால், உண்மையில் நம் எல்லோருக்கும் பசுவே தாயாக இருந்து பால் தந்து காக்கிறது.பெற்ற தாய் கூட இரண்டு வயது வரை தான் பால் தருவாள். ஆனால், எத்தனை வயதானாலும் பசுவின் பால், மோர், தயிர், நெய் நம் உணவில் சேர்த்துக் கொள்ள மறப்பதில்லை. 


வயதாகி சாப்பிட முடியாத நிலை வரும் போது, பசும்பால் மட்டுமே நமக்கு 
கைகொடுக்கிறது. உயிர் வெளியேறத் துடிக்கும் போது, குழந்தைகளெல்லாம் வாயில் பால் ஊற்றுகிறார்கள். இறந்த பிறகு சமாதியிலும் பால் ஊற்றுகிறார்கள். இப்படி பிறப்புமுதல் இறப்புக்குப் பிறகும் நம்மை வளர்த்து ஆளாக்கிய தாயான பசுவுக்கு நன்றிக்கடன் செலுத்தும் நோக்கத்திலேயே மாட்டுப்பொங்கல் இடப்படுகிறது. அதனால் தான் அதனை "கோமாதா'' என்று அழைக்கிறோம்.

பசுவுக்காக வாழ்ந்த சித்தர் :-



திருவாவடுதுறைக்குத் தெற்கே உள்ள சாத்தனூர் என்னும் ஊரில் மூலன் என்னும் இடையன் வாழ்ந்து வந்தான். தான் வளர்த்து வந்த பசுக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தான். பசுக்களும் மூலன் மீது தன் அன்பைப் பொழிந்தன. ஒருநாள் காட்டில் மேய்ச்சலுக்கு சென்றபோது, ஒரு பாம்பு மூலனைத் தீண்டியது. அவன் இறந்து விட்டான்.

மூலனை விட்டுப் பிரிய மனமில்லாத பசுக்களின் கண்களில் கண்ணீர் பெருகியது. அவனைச் சுற்றிச் சுற்றி வந்து கதறி நின்றன. வான் வழியே சென்று கொண்டிருந்த சிவயோகியான சித்தர் ஒருவர் இக்காட்சியைக் கண்டு பசுக்கள் மீது இரக்கம் கொண்டார். பசுக்களின் கண்ணீரைத் துடைக்க எண்ணம் கொண்டார். "பரகாயப்பிரவேசம்" என்னும் கூடுவிட்டுக் கூடுபாயும் முறையில் மூலனின் உடம்பில் புகுந்தார். அதுவரை மூலனாக இருந்த அந்த உடல், சித்தரின் புனித சேர்க்கையால் "திருமூலர்" என்ற பெயர் பெற்றது. அவர் புகழ் பெற்ற சித்தர் ஆனார். தன் மீது அன்புகாட்டிய மூலன் உயிர்த்தெழுந்ததைக் கண்ட பசுக்கள் மகிழ்ச்சியில் திளைத்தன. காலையிலிருந்து பசும்புல் உண்ணாமல் வாடி நின்ற பசுக்கூட்டங்களை திருமூலர் நீர் அருந்தச் செய்து, 
வயிறார மேயச் செய்து ஊர்போய் சேர்ந்தார். இவர் எழுதிய பாடல்கள் "திருமந்திரம்" என்று போற்றப்படுகிறது.

பசுக்குலத்திற்கே பெருமை :-



அப்பர் தேவாரத்தில் ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல் 
என்று பாடுகிறார். "ஆ" என்றால் பசு; "அஞ்சாடுதல்" என்றால் "பஞ்சகவ்யத்தால் 
அபிஷேகம் செய்தல்". பஞ்சகவ்யம் என்பது பசுவிடமிருந்து உண்டாகும் 


- பால் 
- தயிர் 
- நெய் 
- கோமியம் (பசுவின் ஜலம்) 
- கோமயம் (பசுஞ்சாணம்) 


என்னும் ஐந்து பொருள்களும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் சேர்ந்த கலவையே பஞ்சகவ்யம் எனப்படும். 


இதுதவிர, 


- பாலபிஷேகம் 
- தயிர் அபிஷேகம் 
- நெய்யபிஷேகம் 


என்று தனித்தனியாகவும் சிவபெருமானுக்குச் செய்வதும் உண்டு. 


திருவையாறு அருகிலுள்ள "தில்லைஸ்தானம்" என்னும் தலத்தில் இருக்கும் 
பெருமானுக்கு நெய்யபிஷேகம் சிறப்பாகும். தில்லைஸ்தானம் என்னும் இத்தலம்  தேவாரத்தில் திருநெய்த்தானம் என்று குறிக்கப்பட்டுள்ளது. பஞ்சகவ்யத்தால்  சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது பசுக்குலத்திற்கே பெருமை என்று அப்பர்  குறிப்பிடுகிறார். பால் அபிஷேகத்தை "கோசிருங்கம்" எனப்படும் பசுக்கொம்பினால் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும். 


*சாத்வீக** **உணவு**:* சாதுவான பிராணியான பசுவினைத் தெய்வமாகக் கருதி வழிபாடு  செய்கிறோம். பசு தன் கன்றுக்கு மட்டுமில்லாமல் மனிதசமுதாயத்திற்கு மகத்தான உணவுப்பொருளாகப் பாலைத் தருகிறது. உணவு வகையில், 


- சாத்வீகம் (சாந்தம்) 
- இராட்சசம்(மிருகம்) 
- தாம்சம் (மந்தம்) 


என்று முக்குணங்களை ஏற்படுத்தும் பொருள்கள் உண்டு. 


இதில் பசுவின் பால் சாத்வீக உணவாகும். பால் பசுவின் இரத்தம் என்பதால் அதுவும்  அசைவம் தானே என்ற அபிப்ராயம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். ஆனால், சாஸ்திரத்தில் பசும்பால் சாத்வீக உணவு என்றே குறிக்கப்பட்டுள்ளது. பாலைக் கொடுப்பதால் பசுவிற்கு ஹிம்சை எதுவும் இல்லை. அது நம் அறிவை துலங்கச் செய்கிறது. பல சாதுக்கள், பசும்பாலை ஆகாரமாகக் கொண்டு உதாரணமாக வாழ்ந்து  காட்டியிருக்கிறார்கள். முக்குண உணவுகளைப் பற்றி விவரிக்கும் கீதையை போதித்த கிருஷ்ணர், ஆயர்பாடியில் பாலையும், வெண்ணெயையும் திருடிச் சாப்பிட்ட 
நவநீதகிருஷ்ணனாக இருந்திருக்கிறார். இந்து சமயத்தில் பசுவை வணங்குவதைப் பெரும் புண்ணியமாகக் கருதுகின்றனர். இந்தப் பசுவை கோமாதா என்றும் பெருமையுடன் அழைக்கின்றனர். பசுவின் உடலில் ஒவ்வொரு பகுதியிலும் தெய்வங்களும், புனிதத்திற்குரியவர்களும் இருப்பதாகக் கருதுகின்றனர்.

*பசுவின் கொம்புகளின் அடியில் – பிரம்மன், திருமால்
*கொம்புகளின் நுனியில் – கோதாவரி முதலிய புண்ணிய தீர்த்தங்கள்,சராசை உயிர் வர்க்கங்கள்
*சிரம் – சிவபெருமான்
*நெற்றி நடுவில் – சிவசக்தி
*மூக்கு நுனியில் – குமரக் கடவுள்
*மூக்கினுள் – வித்தியாதரர்
*இரு காதுகளின் நடுவில் – அசுவினி தேவர்
*இரு கண்கள் – சந்திரர், சூரியர்
*பற்கள் – வாயு தேவர்
*ஒளியுள்ள நாவில் – வருண பகவான்
*ஓங்காரமுடைய நெஞ்சில் – கலைமகள்
*மணித்தலம் – இமயனும் இயக்கர்களும்
*உதட்டில் – உதயாத்தமன சந்தி தேவதைகள்
*கழுத்தில் – இந்திரன்
*முரிப்பில் – பன்னிரு ஆரியர்கள்
*மார்பில் – சாத்திய தேவர்கள்
*நான்கு கால்களில் – அனிலன் எனும் வாயு
*முழந்தாள்களில் – மருத்துவர்
*குளம்பு நுனியில் – சர்ப்பர்கள்
*குளம்பின் நடுவில் – கந்தவர்கள்
*குளம்பிம் மேல் இடத்தில் – அரம்பை மாதர்
*முதுகில் – உருத்திரர்
*சந்திகள் தோறும் – எட்டு வசுக்கள்
*அரைப் பரப்பில் – பிதிர் தேவதைகள்
*யோனியில் – ஏழு மாதர்கள்
*குதத்தில் – இலக்குமி தேவி
*வாயில் – சர்ப்பரசர்கள்
*வாலின் முடியில் – ஆத்திகன்
*மூத்திரத்தில் – ஆகாய கங்கை
*சாணத்தில் – யமுனை நதி
*ரோமங்களில் – மகாமுனிவர்கள்
*வயிற்றில் – பூமாதேவி
*மடிக்காம்பில் – சகல சமுத்திரங்கள்
*சடாத்களியில் – காருக பத்தியம்
*இதயத்தில் – ஆசுவனீயம்
*முகத்தில் – தட்சிணாக்கினி
*எலும்பிலும், சுக்கிலத்திலும் – யாகத் தொழில் முழுவதும்
*எல்லா அங்கங்கள் தோறும் – கலங்கா நிறையுடைய கற்புடைய மாதர்கள் வாழ்கிறார்

 கட்டுரையை - விவேகா அவர்களுக்கு, மனமார்ந்த நன்றிகள். 
source://livingextra.com/


 

No comments:

Post a Comment